திமுகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: பாஜக
ஜெய்ப்பூர்:
தமிழகத்தில் பாஜக அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவைக் கண்டித்து அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜக இளைஞர் அணி தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ராமர் பாலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரமும், தமிழக முதலமைச்சர் கருணாநிதி ராமரை பற்றி தெரிவித்த கருத்துக்களும் கோடிக்கணக்கான இந்தியர்களின் மத உணர்வை புண்படுத்தியிருக்கிறது.
இதற்காக பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி, கருணாநிதி ஆகியோர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்களை நீக்க வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 2ம் தேதி நாடு தழுவிய அளவில், கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.