முன்ஜாமீன் பெற பெனாசிர் முடிவு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் திரும்பும்போது தன்னை பாகிஸ்தான் அரசு கைது செய்யாமல் தவிர்க்கும் வகையில், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் பெனாசிர் பூட்டோ முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளார்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், சில வாரங்களுக்கு முன்பு நாடு திரும்பினார். ஆனால் அவரை மீண்டும் நாடு கடத்தியது முஷாரப் அரசு. இந்நிலையில் லண்டனில் தங்கியிருக்கும் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ அக்டோபர் 18ம் தேதி பாகிஸ்தான் திரும்ப முடிவு செய்துள்ளார்.
பெனாசிரை, நவாஸ் ஷெரீப்பைப் போல முஷாரப் அரசு நடத்தாது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருப்பினும் பெனாசிர் மீது முஷாரப் அரசு தொடர்ந்துள்ள ஊழல் வழக்குகள் அந்நாட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
அந்த வழக்கு தொடர்பாக பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனவே தான் நாடு திரும்பும்போது பாகிஸ்தான் அரசு தன்னை கைது செய்தாலும் செய்யலாம் என்று பெனாசிர் எதிர்பார்க்கிறார்.
எனவே முன்னெச்சரிக்கையாக முன்ஜாமீன் பெற அவர் திட்டமிட்டுள்ளார். இதனால் அவர் சார்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
மேலும், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யும் போது, தன்மீது ஏதாவது தாக்குதல் நடத்தப்பட்டால் அதிலிருந்து தப்ப, பாகிஸ்தான் அரசின் அனுமதி பெற்று வெளிநாட்டிலிருந்து குண்டு துளைக்காத 3 கார்களையும் இறக்குமதி செய்கிறாராம் பெனாசிர்.
பாகிஸ்தானில் 6ம் தேதி பந்த்:
பாகிஸ்தானில் அதிபர் தேர்தலில் முஷாரப் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அக்டோபர் 6 ம் தேதி பாகிஸ்தான் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அங்குள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.