ஆட்சிக்காக அமைச்சரைக் 'காவு' கொடுத்த பாஜக!
பெங்களூர்:
மதச்சார்பற்ற ஜனதாதளத்திடமிருந்து ஆட்சியைப் பெறுவதற்கு வசதியாக, கர்நாடக முதல்வர் குமாரசாமி கொலை முயற்சி புகார் கொடுத்த அமைச்சர் ஸ்ரீனிவாசுலுவை, பாஜக காவு கொடுத்துள்ளது. ஸ்ரீனிவாசுலு நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
கர்நாடகத்தில் ஆளுக்கு 20 மாதங்கள் என ஒப்பந்தம் செய்து கொண்டு பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளன. அதன்படி முதலில் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. குமாரசாமி முதல்வராக இருக்கிறார்.
ஒப்பந்தப்படி அக்டோபர் 3ம் தேதி அவர் பாஜகவிடம் முதல்வர் பதவியை விட்டுத் தர வேண்டும். ஆனால் அதில் திடீரென சிக்கல் எழுந்தது. பாஜகவுக்கும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் வெடித்தன.
இதற்கு உச்சமாக, பாஜக சார்பில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்ரீனிவாசுலு, முதல்வர் குமாரசாமி மீது பெல்லாரி போலீஸில் கொலை முயற்சிப் புகாரைக் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்குப் பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. திட்டமிட்டபடி பாஜகவிடம் முதல்வர் பதவியை ஒப்படைக்கக் கூடாது என்று அக்கட்சி எம்.எல்.ஏக்கள் குமாரசாமியையும், தேவெ கெளடவையும் வலியுறுத்தினர். இதனால் முதலில், முதல்வர் பதவியை ஒப்படைக்க முடிவு செய்திருந்த குமாரசாமியும் மனம் மாறினார்.
மேலும் தேவெ கெளடாவும், ஸ்ரீனிவாசுலு குறித்த பிரச்சினையை சரி செய்த பின்னரே ஆட்சியை ஒப்படைப்பது குறித்துப் பேச முடியும் என்று கூறி விட்டார். இதனால் கர்நாடகத்தில் பெரும் அரசியல் சிக்கல் ஏற்படக் கூடிய சூழ்நிலை எழுந்தது.
இதையடுத்து டெல்லியிலிருந்து பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா பெங்களூர் விரைந்து வந்தார். கட்சித் தலைவர்களுடனும், துணை முதல்வர் எடியூரப்பாவுடனும் ஆலோசனை நடத்தினார். இதில், ஸ்ரீனிவாசுலுவை ராஜினாமா செய்ய வைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஸ்ரீனிவாசுலு தனது ராஜினாமா கடிதத்தை எடியூரப்பாவிடம் வழங்கினார். ஆனால் அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீனிவாசுலு, குமாரசாமியை கடுமையாக விமர்சித்தார்.
ஸ்ரீனிவாசுலு கூறுகையில், குமாரசாமி ஒரு பொய்யர். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பெல்லாரி விவகாரத்தை பயன்படுத்தி பாஜகவை மிரட்டுகிறார் குமாரசாமி.
நானாகத்தான் ராஜினாமா செய்தேன். யார் சொல்லியும் ராஜினாமா செய்யவில்லை. ஒருவேளை எடியூரப்பா முதல்வரானாலும் கூட நான் அமைச்சர் பதவியை ஏற்க மாட்டேன். பாஜக சொந்தக் காலில் ஆட்சி அமைத்தால் மட்டுமே அமைச்சர் பதவியை ஏற்பேன்.
பாஜகவுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி அவர் ஆட்சியை ஒப்படைக்காவிட்டால் அவரை நிச்சயம் கடவுள் மன்னிக்க மாட்டார் என சாபம் விடுவது போல கோபமாக கூறினார்.
திருப்தி இல்லை - குமாரசாமி
ஸ்ரீனிவாசுலு ராஜினாமாவால் மதச்சார்பற்ற ஜனதாதளம் திருப்தி அடைந்தது போலத் தெரியவில்லை. இதுகுறித்து குமாரசாமி கூறுகையில், ஸ்ரீனிவாசுலு ராஜினாமா செய்தது புதிய விஷயமல்ல. பலமுறை அவர் இவ்வாறு செய்துள்ளார். பாஜக தலைவர்கள் ஏற்படுத்திய காயம், வலி, இந்த ஒரு ராஜினாமாவால் ஆறி விடாது.
இந்தியாவில் இதுவரை ஒரு முதல்வர் மீது எந்த அமைச்சரும் இப்படி ஒரு புகாரைக் கூறியதில்லை.
ஆட்சி மாற்றம் குறித்து இன்னும் 2 நாட்கள் பொறுத்திருந்து பாருங்கள். இப்போது நான் எதையும் கூற முடியாது என்றார் குமாரசாமி.
ஸ்ரீனிவாசுலு ராஜினாமாவால் ஆட்சி மாற்றத்திற்கான சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பாஜக கருதுகிறது. ஆனால் மதச்சார்பற்ற ஜனதாதளம் தரப்பில் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பது தொடர்ந்து சஸ்பென்ஸ் ஆகவே உள்ளளது.