ஊர் விட்டு ஊர் சென்று செல்போன் திருடி போலீஸில் சிக்கிய வாலிபர்
நாகர்கோவில்:
செல்போன் கடையில் திருடி..செல்போனை உபயோகித்த போது பலே திருடன் சிக்கினான்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் கீழ புத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் கோபி (24), இவர் மீது நாகர்கோவில் மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் நகைபட்டறைகளை கொள்ளையடித்தல் உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. ஒரு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையாகியுள்ளார்.
இவர் கடந்த 14ம் தேதி குற்றாலத்திலுள்ள தனது சித்தப்பா கேசவன் வீட்டுக்கு சென்றுள்ளார். அன்று இரவு பிரானுர் பார்டர் பகுதிக்கு சென்ற அவர் நிஸார் என்பவர் கடையில் சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய ரியலைன்ஸ் செல்போன்கள், வேறு செல்போன்கள் என மொத்தம் 7 செல்போன்களையும், ரீசார்ஜ் கார்டுகளையும் திருடிவிட்டு நாகர்கோவில் வந்துள்ளார்.
புதிய செல்போன்களை இங்குள்ள கடைகளில் விற்றுள்ளார். அதேபோல் ரீசார்ஜ் கார்டுகளையும் விற்றுவிட்டு ஜாலியாக செலவு செய்துள்ளார்.
செல்போன் கடை உரிமையாளர் நிஸார் செங்கோட்டை போலீசில் புகார் செய்யவே அவர்கள் விசாரணையில் இறங்கினர். அப்போது, நாகர்கோவிலை சேர்ந்த மது, மகேஷ் என்ற 2 பேர் விலைக்கு வாங்கியது தெரிய வரவே, செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் நாகர்கோவில் வந்து கோபியை கைது செய்தனர்.
மேலும் அவர் விற்பனை செய்த செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கூடுதல் விசாரணைக்காக அவரை செங்கோட்டைக்கு அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications