குடிபோதையில் இருந்த ஊழியர் - ரேஷன் கடையில் மக்கள் முற்றுகை
தென்காசி:
நியாய விலை கடையில் பணிபுரியும் ஊழியர் குடிபோதையில் இருந்ததால் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தென்காசி அருகேயுள்ள பண்பொழி கிராமத்தில் கூட்டுறவு சங்க பகுதி நேர நியாய விலைக் கடை உள்ளது.
இக்கடையில் பண்பொழி நாகம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சீனித்துரை என்பவர் கணக்காளராக (பில் கிளார்க்) பணி புரிகிறார். நேற்று சனிகிழமை நியாய விலை கடை கிடையாது.
ஆனால் இவர் மண்ணெண்னை விநியோகம் செய்வதற்காக மதியம் 2 மணி வந்தார். அப்போது முழு போதையில் இருந்துள்ளார். மண்ணெண்னை விநியோகத்தை தொடங்கியபோது முதலில் கள்ள மர்க்கெட் வியாபாரிகளுக்கு ஏராளமான லிட்டர் மண்ணெண்னை கடத்தி விட்டு பின்பு மக்களுக்கு விநியோகம் தொடங்கியுள்ளார்.
போதையில் வந்தது மட்டுமல்லாமல், மக்களுக்காக வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையை கள்ள மார்க்கெட் பேர்வழிகளுக்கு அவர் கொடுத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதைப் பார்த்து கடை எடையாளர் பயந்து ஓடி விட்டார். சீனித்துரை, கடைக்குள் இருந்த இன்னொரு அறைக்குள் போய் உள்ளே மூடிக் கொண்டார்.
இதையடுத்து பொதுமக்கள் சீனித்துரை கடைக்குள்ளிருந்து வெளியே வர வேண்டும் என்று வலியுறுத்தி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் குதித்தனர்.
அதிகாரிகளுக்குத் தகவல் போனது. ஆனால் யாரும் வரவில்லை. மாலை 6.30 மணியளவில் தென்காசி தாசில்தார் திருவேங்கடம் மற்றும் அதிகாரிகள் வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அந்த ஊழியரை மீட்டனர்.
குடிபோதையில் நியாய விலைகடைக்கு வரும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவது, அரசின் 2 ரூபாய் அரிசியை கடத்துவது போன்றவைகளை இந்த ஊழியர் செய்து வருவதாகவும் ஏற்கனவே 2 முறை பணி இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications