சாலை விபத்தில் 2 பேர் பலி
மேல்மருவத்தூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே மினி லாரியும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
சென்னையிலிருந்து கோவைக்கு இன்று அதிகாலை ஒரு மினி லாரி போய்க் கொண்டிருந்தது. அதேபோல சென்னையில் இருந்து திண்டிவனத்திற்கு ஒரு லாரி போய்க் கொண்டிருந்தது.
மேல்மருவத்தூர் அருகேயுள்ள சொட்டுபாக்கம் என்னுமிடத்தில் வந்தபோது சென்னை லாரி பஞ்சர் ஆனது. இதையடுத்து அதை சாலையோரம் நிறுத்தி பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த மினி லாரி, லாரி மீது மோதியது. இதில் மினி லாரியில் பயணித்த ஞானசேகரன் (37) மற்றும் அவரது மாமனார், இஸ்ரவேல் (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மினி லாரியின் கிளீனர் ராமர் (25) படுகாயமடைந்து செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.