கருணாநிதிக்கு மத்திய அரசு முழு ஆதரவு!
டெல்லி:
முதல்வர் கருணாநிதி மகாத்மா காந்தியின் வழியில் நடக்கிறார். அவர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறவில்லை. திமுக அரசும், முதல்வர் கருணாநிதியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மிக மிக முக்கியமானவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று திமுக கூட்டணியினர் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மத்திய அரசு தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி கூறுகையில், முதல்வர் கருணாநிதி மிகப் பெரிய தலைவர். இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர்.
அவர் உச்சநீதிமன்றத்திற்கு முரணாக நடக்கவில்லை, உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறவில்லை. மகாத்மா காந்திய வழியைத்தான் அவர் பின்பற்றுகிறார். காந்தி போதித்த அற வழியில்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக அரசும், முதல்வர் கருணாநிதியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மிக மிக முக்கியமானவர்கள் என்று கூறினார்.
தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யத் தயங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கடுமையாக கூறியுள்ள நிலையில், மத்திய அரசு திமுக அரசுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
''இப்போது டிஸ்மிஸ் செய்ய தேவையில்லை'':
தமிழக பந்த் குறித்து உச்சநீதிமன்றம் வாய்மொழியாக தெரிவித்த யோசனையை ஏற்று தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யத் தேவையில்லை. இறுதி தீர்ப்புதான் மத்திய அரசைக் கட்டுப்படுத்த முடியும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அபிஷேக் பேசுகையில்,
தீர்ப்பை கருணாநிதி அரசு மீறியதா, இல்லையா என்பதை உச்சநீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும். அது வழக்கின் இறுதியில்தான் தெரிய வரும். வழக்கின் இறுதித் தீர்ப்பில் கூறப்படுவதுதான் மத்திய அரசையும், மாநில அரசையும் கட்டுப்படுத்தும்.
தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கு சம்பந்தப்பட்டது. அதுகுறித்து காங்கிரஸ் கட்சி கருத்து கூற முடியாது என்றார் சிங்வி.












Click it and Unblock the Notifications