தமிழை மூச்சாக கொண்ட ஜீவா: நல்லகண்ணு
நெல்லை:
தமிழை தன்னுடைய உயிர் மூச்சாக கொண்டவர் ஜீவா என்று நெல்லையில் நடைபெற்ற விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு புகழ்ந்து பேசினார்.
தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் சார்பில் ஜீவா நூற்றாண்டு விழா நெல்லை தமிழ் பண்பாட்டு வளர்ச்சி மையத்தில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
நெல்லையில் ஜீவா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க என்னை வர வேண்டும் என அழைத்தனர். ஜீவாவின் பெருமைகளை கூற நான் கடமைப்பட்டிருக்கிறேன். முன்பெல்லாம் மாநாடு போன்றவை நடக்கும்போது தான் ஒலிப்பெருக்கி போடப்படும்.
ஜீவா கூட்டத்தை காண வந்திருக்கும் அனைவருக்கும் தன்னுடைய உரை கேட்க வேண்டும் என்பதற்காக ஓங்கி சத்தம் போடுவார். பேச்சுக்கு ஏற்றவாறு உடல் அங்கங்களையும் அசைப்பார். இவ்வாறு அவர் செயல்பட்டதாலேயே அவருடைய காது கேட்காமல் போனது.
மக்கள் பிரச்சனைகள், ஆங்கில ஆட்சிக்கு எதிரான பேச்சுகள், சாதிக் கொடுமைகள் பற்றி ஜீவா ஆவேசம் பொங்க பேசுவார். இந்த 2007ம் ஆண்டு பல வரலாற்றினை படைத்துள்ளது. ஜீவாவின் நூற்றாண்டு விழாவான இந்த ஆண்டில் 30 பேரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.
பகவத்சிங் நூற்றாண்டு விழா என பல நூற்றாண்டு விழா இந்த ஆண்டு வந்துள்ளது. 1857 தான் முதல் சுதந்திர போராக இருந்தாலும், 1806ல் நடைபெற்ற வேலூர் புரட்சி வெளியில் தெரியாமல் போனது. வேலூர் புரட்சி தென்மாவட்ட போராட்டங்களின் எல்லையாக இருந்தது.
இந்திய தலைவர்கள் தேவைகேற்ற மாறுதல்களோடு போராடினார்கள். சாதிக் கொடுமைகள் அந்த காலத்தில் அளவுக்கு அதிகமாக இருந்தது. அப்போது சில வகுப்பினர் தெருவில் கூட நடமாட முடியாத நிலை இருந்தது. இவ்வாறு ஒவ்வொரு சாதியினரும் ஒவ்வொரு எல்லைகளை நிர்ணயித்து கடுமையாக கடைபிடித்து வந்தனர்.
இவ்வாறு இருந்த நிலையில் ஜீவா தலித் சிறுவர்களை அழைத்து அக்ரஹாரத்தில் பஜனை பாடினார். தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட ஜீவா தமிழை உயிர் மூச்சாக நினைத்து கடைசி வரை வாழ்ந்தார்.
புரட்சி என்ற வார்த்தையை தமிழில் கொண்டு வந்தது பாரதிதாசன். அந்த புரட்சியை சமூக மாற்றம் பாண்பாடு மாற்றம் இலக்கிய மாற்றம் என கடமையாக கொண்டவர் ஜீவா.
கேள்வி கேட்டு விடை காணும் வரை ஜீவா விடுவதில்லை. மகாத்மா காந்தியடிகள் காரைக்குடிக்கு வந்தபோது ஜீவாவை அழைத்து பேசினார். அப்போது நாட்டிற்கே நீதான் சொத்து என ஜீவாவைப் பாராட்டினார்.
நான் ஏன் நாத்தீகன் ஆனேன் என்ற நூலை ஜீவா வெளியிட்டதற்காக அவருக்கு சிறை தண்டனையும், அபராதமும் அப்போதைய ஆங்கிலேய அரசு அளித்தது.
பாரதியை பின்பற்றி தமிழ் இலக்கியத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் ஜீவா. தற்போது தமிழ் மொழி செம்மொழியாக்கப்பட்டுள்ளது. இன்னும் செம்மொழிக்கான உத்திரவாதம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications