கருணாநிதிக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்: அரசுக்கு 'டிஸ்மிஸ்' எச்சரிக்கை
டெல்லி:
உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி தமிழகத்தில் பந்த் நடத்தப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு தயங்கக் கூடாது என்றும், இதுகுறித்து விளக்கம் கேட்க தமிழக முதல்வர் கருணாநிதிக்கும், தலைமைச் செயலாளருக்கும் சம்மன் அனுப்ப நேரிடும் எனவும் எச்சரித்தது.
இதையடுத்து கருணாநிதி தனது உண்ணாவிரதத்தை பாதியில் முடித்துக் கொண்டார். பஸ்களும் இயக்கப்பட்டன.
தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த பந்த்தை நடத்த உச்சநீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தது. ஆனால் பந்த்துக்குப் பதிலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என திமுக கூட்டணி அறிவித்தது.
ஆனால் நடந்தது உண்ணாவிரதப் போராட்டம் தான் என்றாலும் , நிலைமை பந்த் போலவே காணப்பட்டது. பேருந்துகள் ஓடவில்லை. விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. தியேட்டர்களும் மூடப்பட்டன.
பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளும் இயங்காமல் தமிழகம் இன்று காலை வெறிச்சோடிப் போனது.
முதல்வர் கருணாநிதி சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான திமுக கூட்டணி தொண்டர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் ஸ்தம்பித்துப் போயிருந்தது.
இந் நிலையில் அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று காலை ஒரு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் பேருந்துப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே பேருந்துப் போக்குவரத்தை உடனடியாக மீண்டும் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.என்.அகர்வால், பி.சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று உடனடியாக விசாரித்தது. அப்போது பேருந்துகள் நிறுத்தப்பட்டதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தில் அரசியல் சட்டம் முழுமையாக மீறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி பந்த் நடத்தப்படுவது கடும் கண்டனத்துக்குரியது.
இப்படிப்பட்ட அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு தயங்கக் கூடாது. இதுகுறித்து விளக்கம் கேட்க தமிழக முதல்வரையும், தலைமைச் செயலாளரையும் நீதிமன்றத்திற்கு நேரில் வரவழைக்க உத்தரவிட நேரிடும் என்று கடுமையாக எச்சரித்துள்ளது.
இதையடுத்து உண்ணாவிரதத்தை கருணாநிதி பாதியில் நிறுத்தினார். பஸ்களும் மீண்டும் இயக்கப்பட்டன.
ஆனாலும் மாலை வரை இயல்பு நிலை திரும்பவில்லை.