ஜெ. மீதான ஊழல் வழக்குகளில் உடனடி நியாயம் கிடைக்குமா?: கருணாநிதி
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மக்கள் சக்தியால் மட்டுமே நீதி கிடைக்கும். வேறு எந்த சக்தியாலும் நீதி கிடைக்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே இன்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தனது 84 வயதையும் பொருட்படுத்தாமல் காலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார் முதல்வர் கருணாநிதி.
அப்போது அவர் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்த நிலையில் திடீரென அதை ரத்து செய்து உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை பிறப்பித்தது.
என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் எடுத்த முடிவுப்படி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
உச்ச நீதிமன்றம் நேற்று தனது உத்தரவில் உண்ணாவிரதம் மேற்கொள்ளக் கூடாது என்று தடை ஏதும் விதிக்கவில்லை. ஆனால், இந்த உண்ணாவிரதம் தவறானது என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன், அந்த உத்தரவை மதிப்பேன் (கடைசியில் அது தான் நடந்தது)
ஜெயலலிதா மீது ஏகப்பட்ட ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், அதில் எல்லாம் இதுபோலேவே உடனடியாக நியாயம் கிடைத்துவிடும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. நாம் ஒருதலைப்பட்சமான ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சேது சமுத்திரத் திட்டம் பயன் அளிக்கும் திட்டம். இதை அனைவரும் வரவேற்கிறார்கள். ஆனால் இன்று யார் யார் குறுக்கே நிற்கிறார்களே, அவர்கள்தான் 2001ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், இந்தியா மட்டுமல்லாது, தென் கிழக்கு ஆசிய நாடுகளும் பயன் பெறும் என்று கூறியுள்ளனர்.
இன்று அவர்களே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒருமித்துக் குரல் கொடுத்தால்தான் நிறைவேற்ற முடியும்.
மக்கள் சக்தியால் மட்டுமே இதற்கு நீதி கிடைக்கும். வேறு எந்த சக்தியாலும் நீதி கிடைக்காது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications