ஆட்சியை ஒப்படைக்க குமாரசாமிக்கு பாஜக 24 மணி நேர கெடு!

Subscribe to Oneindia Tamil


பெங்களூர்:

ஒப்பந்தப்படி பாஜகவிடம் முதல்வர் பதவியை மதச்சார்பற்ற ஜனதாதளம் ஒப்படைக்காது என்ற பேச்சு நிலவுவதாலும், பாஜக 24 மணி நேரம் கெடு விதித்துள்ளதாலும், கர்நாடகத்தில் இடைத் தேர்தல் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

20-20 (அதாவது ஆளுக்கு 20 மாதங்கள்) என்ற ஒப்பந்தத்தின் கீழ் கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளமும், பாஜகவும் ஆட்சி நடத்தி வருகின்றன. முதல் பாதி ஆட்சியில் முதல்வர் பொறுப்பு மதச் சார்பற்ற ஜனதாதளத்திற்கும், 2வது பாதியில் பாஜகவும் முதல்வர் பொறுப்பை வகிப்பது என்பது உடன்பாடு.

அதன்படி முதல் பாதி ஆட்சியின் முதல்வராக குமாரசாமி இருந்து வருகிறார். ஒப்பந்தப்படி நாளை அவர் பாஜகவிடம் முதல்வர் பதவியை ஒப்படைக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடப்பது போலத் தெரியவில்லை.

பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் ஸ்ரீராமுலு, முதல்வர் குமாரசாமி மீது கொலை முயற்சி புகார் கூறியதால் கடுப்பான மதச்சார்பற்ற ஜனதாதளம், ஒப்பந்தப்படி முதல்வர் பதவியை பாஜகவிடம் தர முரண்டு பிடித்து வருகிறது.

கூறியபடி முதல்வர் பதவியை பாஜகவிடம் ஒப்படைப்பேன் என்று முதலில் கூறியிருந்தார் குமாரசாமி. ஆனால் கட்சி எம்.எல்.ஏக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், பல்டி அடித்த குமாரசாமி, கட்சியினருடன் ஆலோசித்த பின்னர்தான் எந்த முடிவையும் அறிவிப்போம் என்று அந்தர் பல்டி அடித்தார்.

சிக்கல் பெரிதாகி வந்ததால் மேலிடத்திலிருந்து யஷ்வந்த் சின்ஹா பெங்களூருக்கு அனுப்பப்பட்டார். அவர் வந்து தேவே கெளடாவிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் கூட சிக்கலுக்கு விடிவு ஏற்படுவது போலத் தெரியவில்லை. காரணம் ஆட்சியை ஒப்படைக்க கெளடா விதித்த நிபந்தனைகளே காரணம்.

இந் நிலையில் ஸ்ரீராமுலு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அத்தோடு நில்லாமல் குமாரசாமியை சகட்டுமேனிக்கு விமர்சித்தார்.

இந்த நிலையில், முதல்வர் பதவிக்கு தற்போதைய துணை முதல்வர் எடியூரப்பாவை நியமிக்கக் கூடாது, வேறு யாரையாவது போட வேண்டும் என மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதை பாஜக ஏற்கவில்லை.

தேவெ கெளடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகத் தீர்வு ஏற்படும் வழியைக் காணாததால் விரக்தி அடைந்த யஷ்வந்த் சின்ஹா, இப்போதைய சூழ்நிலையில், மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் பேசி எந்தப் புண்ணியமும் இல்லை என்று தெரிவித்தார்.

தன்னை சந்தித்து பேசிய சின்ஹாவிடம் கெளட பல அதிருப்திகளைத் தெரிவித்தாராம். அதாவது, கொலை முயற்சிப் புகார் கூறிய ஸ்ரீராமுலு, ஊழல் புகார் கூறிய ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் மீது பாஜக மேலிடம் நடவடிக்கை எடுக்காதது குறித்து கெளடா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

எங்களைப் பற்றி அவதூறாகப் பேசியவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், எதை நம்பி உங்களிடம் ஆட்சியை ஒப்படைப்பது என்று கெளடா கேட்டாராம். மேலும் குமாரசாமியே தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்க பாஜக ஆதரவு தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அதுபோதாதென்று முக்கிய அமைச்சர் பொறுப்புகளும் மதச்சார்பற்ற ஜனதாதளத்திடமே இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினாராம்.

இதைக் கேட்டு சின்ஹா கடுப்பாகி விட்டாராம். இதற்குப் பேசாமல் இடைத் தேர்தலை சந்திக்கலாம் என தனது கட்சியின் மாநிலத் தலைவர்களிடம் அவர் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இடைத் தேர்தலை சந்திக்க நாங்கள் தயார் என்று துணை முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கணிசமான வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ், ஜனதா தளத்துக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைத் தான் பாஜக பிடித்துள்ளது. இதை மனதில் கொண்டுதான் பாஜகவிடம் பிடிவாதப் போக்கை காட்ட ஆரம்பித்துள்ளது அக்கட்சி என்று கூறப்படுகிறது.

கடந்த 28ம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் 1,399 வார்டுகளில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் இக்கட்சிக்கு 415 வார்டுகள் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சிக்கு 1,582 வார்டுகள் கிடைத்தன. 3வது இடத்தை பாஜக பிடித்தது. அக்கட்சிக்கு 1,170 இடங்கள் கிடைத்தன.

24 மணி நேர கெடு:

இந் நிலையில் பாஜக சார்பில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 24 மணி நேர கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைக்க 24 மணி நேரம் கெடு விதிக்கிறோம்.

20 மாதங்களுக்கு முன்பு பாரதீய ஜனதா தலைவர்களும், குமாரசாமியும் என்ன ஒப்பந்தம் செய்தார்களோ அது தான் இறுதியானது. இதில் எந்த மாற்றமும் இல்லை. எடியூரப்பா தான் அடுத்த முதல்வர்.

இன்று காலை முதல்வர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்து கடிதத்தை கவர்னரிடம் அளித்து பாரதீய ஜனதா தலைமையில் அமையும் கூட்டணி அரசுக்கு மதசார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளிக்கிறது என்ற கடிதத்தையும் அவர் கவர்னரிடம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதுதான் எங்களின் இறுதியான முடிவு. மீண்டும் அவர்களுடன் பேச்சு நடத்த மாட்டோம். அக்டோபர் 3-ந் தேதிக்குப் பின் காத்திருக்க மாட்டோம் (இல்லாவிட்டால் ஆதரவை வாபஸ்) என்றார்.

இதையடுத்து பாஜக சார்பில் அமைச்சர்களாக உள்ளவர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை எடியூரப்பாவிடம் கொடுத்துள்ளனர்.

இந்தப் புதிய சூழ்நிலை குறித்து குமாரசாமி, தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று அவர் தனது முடிவை தெரிவிப்பார் என்று தெரிகிறது.

குமாரசாமி தனது முடிவை இன்று அறிவித்து நாளை மாலைக்குள் ராஜினாமா செய்ய வேண்டும். ஒரு வேளை அவர் ராஜினாமா செய்ய மறுத்தால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை பாரதீய ஜனதா விலக்கிக் கொள்ளும். இதனால் குமாரசாமி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ள காங்கிரஸ் இடையில் புகுந்து குமாரசாமிக்கு ஆதரவு தரலாம் என்று தெரிகிறது. இதனால் ஆட்சி காப்பாற்றப்படும்.

இது தொடர்பாக தேவே கெளடாவுடன் சோனியாவின் சார்பில் மத்திய அமைச்சர் சரத்பவார் பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

நாளை பெங்களூரில் ஜனதா தளம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதில் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டு முக்கிய முடிவு எடுக்கிறார்கள். முன்னதாக இன்று அனைத்து கட்சி தலைவர்களை குமாரசாமி தனித்தனியாக சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டறிகிறார்.

இதற்கிடையே பெங்களூரில் இன்று பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடை பெறுகிறது. குமாரசாமி ராஜினாமா செய்ய மறுத்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

கர்நாடக சட்டசபையில் தற்போது கட்சிகளுக்கு உள்ள பலம் வருமாறு:

மொத்த எம்.எல்.ஏ.க்கள் - 224
பாரதீய ஜனதா - 79
காங்கிரஸ் - 65
மதச்சார்பற்ற ஜனதா தளம் - 58
ஐக்கிய ஜனதா தளம்- 5
இதர கட்சிகள் - 17

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+