'கேலிக்கூத்தை தவிர்த்திருக்கலாம்' -விஜயகாந்த்
சென்னை:
தமிழகத்தில் நடத்தவிருந்த முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டு, உண்ணாவிரதத்தை மற்றொரு நாளில் வைத்திருக்கலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,
முழு அடைப்பு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அரசு அதனை ஏற்று, முழு அடைப்பு போராட்டத்தை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக, தமிழகம் முழுவதும் நேற்று முழு அடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் இரண்டும் நடைபெற்றது.
இந்த முழு அடைப்பு பற்றி உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றதும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அவமதித்து விட்டது. அந்த அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கருத்தும் தெரிவித்தது.
முழு கதவடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டு, உண்ணாவிரதப் போராட்டத்தை வேறொரு நாளில் வைத்திருந்தால் இந்த கேலிக்கூத்தெல்லாம் நிகழ்ந்திருக்காது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications