ஈழத் தமிழர்களுக்காக உணவு சேகரிக்கும் பாஜக
கோயம்புத்தூர்:
இலங்கையில் உணவுப் பொருள் பற்றாக்குறையால் பரிதவித்து வரும் தமிழர்களுக்கு வழங்குவதற்காக தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் சேகரிக்கப்படும் என மாநில பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
கோவை வந்த இல.கணேசன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் வாழும் தமிழர்கள் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
அவர்களுக்காக 5ம் தேதி முதல் பாஜகவினர் வீடு வீடாக சென்று உணவு, உடைகள் உள்ளிட்டவற்றை சேகரிப்பார்கள். பின்னர் வருகிற 11ம் தேதி இவை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும்.
சேது சமுத்திரத் திட்டத்திற்காக மொத்தம் 6 பாதைகள் பரிந்துரைக்கப்பட்டன. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, சேது கால்வாய் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது அறிவிக்கப்பட்ட 3வது பாதையில் திட்டத்தை நிறைவேற்றினால் கோதண்டராமசாமி கோவில் பாதிக்கப்படும் என்பதால், 4வது மாற்றுப் பாதை தேர்வு செய்யப்பட்டது.
ஆனால் தற்போது 6வது பாதையில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
தமிழக முதல்வர் குறித்து பாஜகவுக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் பேசியதற்காக பாஜக அலுவலகத்தை தாக்கியது தவறான முன்னுதாரணமாகும். ஆட்சியில் இருப்பவர்களே வன்முறையில் ஈடுபட்டால் அதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் பாஜக அதைத் தாங்கிக் கொண்டுள்ளது.
மாநில முதல்வரே போராட்டம் நடத்துகிறார். இது ஏற்புடையதல்ல. திமுக பந்த்துக்கு கோர்ட் தடை விதித்தது. அதையும் மீறி பந்த் நடத்தியுள்ளனர். அதேபோல, பொறுப்பான அமைச்சர் பதவியில் உள்ள டி.ஆர்.பாலு, நீதிமன்றத்தை விமர்சித்துப் பேசியுள்ளார். அவர் பதவி விலக வேண்டும்.
ராமர் பாலம் பாதுகாப்பு தேசிய அமைப்பு எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் பாஜக முழு ஒத்துழைப்பு கொடுக்கும். தேர்தலுக்காக நாங்கள் இந்தப் பிரச்சினையை எடுக்கவில்லை.
பாஜக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கு தொடரவுள்ளோம் என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications