ஈழத் தமிழர்களுக்காக புதிய தமிழகம் பேரணி
சென்னை:
இலங்கையில் பட்டினியால் வாடும் ஈழத்தமிழ் மக்களுக்காக புதிய தமிழகம் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
நிருபர்களுக்கு அவர் கொடுத்த பேட்டி:
கடந்த 30 வருடங்களாக நடைபெற்று வரும் ஈழத்தமிழர் விடுதலைப் போர் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமை போரை அங்கீகரித்து பேசுவதும் பின்னர் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தவதும் என தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு வருகிறார்கள்.
சமீப காலமாக ஈழத்தமிழர் போராட்டத்தில் மிகவும் மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது. தினமும் 10 முதல் 15 அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள். இங்குள்ள மத்திய, மாநில அரசுகள் அமைதியாக இருப்பது சரியல்ல.
புதிய தமிழகம் சார்பில் பேரணி:
இலங்கையில் பட்டினியால் வாடும் ஈழத்தமிழ் மக்களுக்கு மருந்து மற்றும் உணவு பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் அனுப்புவதற்கு தடை விதிக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற அக்டோபர் 6ம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பாக எனது தலைமையில் பேரணி நடத்தப்படுகிறது.
இந்த பேரணியை பழ.நெடுமாறன் அவர்கள் தொடங்கி வைக்கிறார். பேரணி மன்றோ சிலையில் தொடங்கி கோட்டை நோக்கி செல்லும்.
உச்சநீதிமன்றத்திற்கு உரிமை கிடையாது:
சேது சமுத்திர திட்டப்பணியை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.
ஜனநாயக நாட்டில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கடையடைப்பு போராட்டம் போன்றவை நடத்துவதற்கு உரிமை உண்டு. இது ஜனநாயக உரிமையாகும். இதில் தலையிட உச்சநீதிமன்றத்திற்கு உரிமை கிடையாது என்று கூறினார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications