'ராமர்': கருணாநிதிக்கு வேதாந்தி 'பதில் சவால்'
லக்னோ:
ராமர் பாலம் குறித்தும், ராமர் குறித்தும் விவாதிக்க தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பாஜக முன்னாள் எம்பி ராம்விலாஸ் வேதாந்தி இன்று திடீரென அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கருணாநிதிக்கு எதிராக பாத்வா விதித்ததில் தவறு கிடையாது. பகவத்கீதையில், யார் ஒருவர் உன்னுடைய கடவுளை பற்றி தவறாக பேசுகிறார்களோ அவரின் நாக்கை துண்டித்து விடு என்று கூறப்பட்டுள்ளது. அதன்படிதான் நான் பாத்வா விதித்தேன். நான் கூறியதில் எந்தத் தவறும் இல்லை.
ராமர் பற்றி தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்புகள் வரும் நவம்பர் 20ம் தேதி போராட்டம் நடத்த உள்ளன.
ராமர் குறித்து விவாதம் நடத்த கருணாநிதி தயார் என்கிறாரே. விவாதிக்க நான் தயார், அவர் தயாரா?.
இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை தான் அதிகம். அவர்களின் மனதை துன்புறுத்தினால், அவர்களின் ஆதரவு திமுக மற்றும் காங்கிரசுக்கு சுத்தமாக கிடைக்காது. மைனாரிட்டிகளின் ஓட்டை நம்பி தான் அவர்கள் காத்திருக்க வேண்டும்.
ராமரை, குடிகாரர் என்று வால்மீகி தனது ராமாயணத்தில் எழுதியுள்ளதாக கருணாநிதி சொல்லி இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். ராமர் தனது வாழ்நாளில் பழங்களைத் தான் உணவாக உட்கொண்டார்.
நான் பாத்வா விதித்ததற்கு என்மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். நான் பாத்வா விதித்தது போல் முன்னாள் மாநில அமைச்சர் ஹாஜி யாகூப் முஸ்லீம் மதத்தை பற்றி தவறாக சித்தரித்த தனிஷ் கார்டூனிஸ்ட் மீது பாத்வா விதித்திருந்தார்.
ஆனால் அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் என் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் வேதாந்தி.