வேலையை முடிக்காத காண்டிராக்டருக்கு ஃபைன் போட்ட கலெக்டர்
திருச்சி:
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட வேலையை முடிக்காத காண்டிராக்டருக்கு ஒரு நாளைக்கு ரூ. 2,500 என அபராதம் விதித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் வச்சானி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு உட்பட்ட செட்டியாபட்டி, பொடங்குப்பட்டி, பன்னப்பட்டி, வேங்கைக் குறிச்சி ஆகிய கிராமங்களில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டன.
இந்தப் பணிகளின் நிலை குறித்து ஆட்சித் தலைவர் வச்சானி ஆய்வு நடத்தினார். அப்போது குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்காமல், பணிகளை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட காண்டிராக்டர் அப்படியே வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த காண்டிராக்டருக்கு ஒரு நாளைக்கு ரூ. 2500 அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த காண்டிராக்டர் ஏற்கனவே பணியை நிறைவேற்றாமல் இழுத்தடித்ததால் அவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அக்டோபர் 15ம் தேதிக்குள் பணியை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காண்டிராக்டருக்கு ஆட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.