திமுக பந்த்: கடைகளை மூடி ஜெ.வையே டபாய்த்த கரூர் அதிமுகவினர்!
கரூர்:
திமுக கூட்டணியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின்போது கரூர் அதிமுகவினர் பெரும்பாலானோரின் கடைகளும் மூடப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை வலியுறுத்தி கடந்த திங்கள் கிழமை அன்று தமிழகத்தில் பந்த் நடைபெறுவதாக திமுக அறிவித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் பந்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது.
இதனால் அதிமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பந்த்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் உண்ணாவிரத போராட்டத்தை திமுக அறித்தது.
கருரில் திமுக சார்பில் கரூர் பஸ் நிலையம் அருகில் கோவை ரோட்டை வழிமறித்து பிரமாண்ட உண்ணாவிரத பந்தல் போடப்பட்டு உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தப் போராட்டத்தில் அதிமுகவினரும் பங்கு கொண்டதுதான். கடைகள், வர்த்தக நிறுவனங்களை வைத்துள்ள அதிமுகவினரும் அன்றைய தினம் தங்களது நிறுவனங்களைத் திறக்கவில்லையாம்.
உச்சகட்டமாக, கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், கரூர் தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியின் நிறுவனமான அபெக்ஸ் டெக்ஸ் நிறுவனமே மூடப்பட்டிருந்ததாம்.
அதே போன்று கரூர் அதிமுக நகர செயலாளர் ஜூபிடர் பாஸ்கர் நிறுவனமான மணி புக் ஸ்டாலும் மூடப்பட்டிருந்தது. இதே போன்று பல அதிமுக நிர்வாகிகள் கடைகள் மூடப்பட்டிருந்தது.
அதிமுகவினரே தங்களது கடைகள், நிறுவனங்களை மூடியிருந்தது கரூரில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தத்தில் கரூர் அதிமுகவினர் ஜெயலலிதாவையே டபாய்த்து விட்டனர் என்பதுதான் உண்மை.