திமுக இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் - ஸ்டாலின்
திருநெல்வேலி:
நெல்லையில் நடக்கவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக இளைஞரணி மாநில மாநாடு டிசம்பர் 16ம் தேதி நெல்லையில் நடக்கிறது. இன்று நெல்லை வந்துள்ள உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாடு நடக்க இருக்கும் மருத்துவக்கல்லூரி மைதானத்துக்கு சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், திமுக சார்பில் மண்டல மாநாடு, வெள்ளிவிழா மாநாடு என்று பல்வேறு மாநாடுகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், இளைஞரணி மாநாடு நடத்த அனுமதி வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதையடுத்து முதன்முதலாக இளைஞரணி மாநில மாநாட்டை நெல்லையில் நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்காக தலைவர் மற்றும் பொது செயலாளருக்கு இளைஞரணி சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இம்மாநாடு கட்சியின் வளர்ச்சிக்கும், இளைஞரணியின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமையும். இதில் 5 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
முழுக்க முழுக்க இளைஞரணி சார்பில் தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இம்மாநாடு வலு சேர்ப்பதாக அமையும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications