கெளடா - ராஜ்நாத் சிங் பேச்சு தோல்வி ஆதரவை வாபஸ் பெறுகிறது பாஜக
டெல்லி:
மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவெ கெளடாவுக்கும், பாஜக தலைநர் ராஜ்நாத் சிங்குக்கும் இடையிலான பேச்சில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து குமாரசாமிக்கு கொடுத்து வரும் ஆதரவை பாஜக இன்றைக்குள் வாபஸ் பெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடக அரசியல் சிக்கலுக்கு தீர்வு காண கடைசி முயற்சியாக ராஜ்நாத் சிங்கை, தேவெ கெளடா நேற்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின்போது கர்நாடக மாநில பாஜகவினரால் தனது மகன் குமாரசாமி பல அவமானங்களை சந்தித்து விட்டதாக கெளடா கூறியதாக தெரிகிறது.
அரசுக்கு பாஜகவினர் பலவிதங்களில் நெருக்கடி கொடுத்ததாகவும் கெளடா ராஜ்நாத்திடம் புகார் கூறியுள்ளார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு தரப்பிலும் தங்களது நிலையில் உறுதியாக இருந்ததால், பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.
பேச்சுவார்த்தை குறித்து பின்னர் வெளியில் வந்த ராஜ்நாத் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கெளடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுத்துரைப்பேன். கெளடாவுடன் பேசியது குறித்துக் கூற முடியாது என்றார்.
ஆனால் நேற்றைய கூட்டத்தின் முடிவை வைத்துப் பார்க்கும்போது, பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம் இடையிலான 20 மாத உறவு முடிவுக்கு வந்து விட்டதாகவே கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக, குமாரசாமி அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை, பாஜக வாபஸ் பெற தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
இன்று மாலைக்குள் பாஜக தனது முடிவை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அறிவிக்க வேண்டும் எனவும் பாஜக கோரிக்கை விடுக்கவுள்ளது.
இதற்கிடையே, பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் நாடகமாடி வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், ஒருபக்கம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பாஜக முதலைக்கண்ணீர் வடிக்கிறது. மறுபக்கம் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறாமல் நாடகமாடி வருகிறது.
கர்நாடகத்தில் தற்போது உள்ள அரசு பதவியில் நீடிப்பதற்கான தகுதியை இழந்து விட்டது. இந்த அரசு முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்றார்.
குமாரசாமி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு தருமா என்ற கேள்விக்கு, இப்போதைய நிலையில் எதையும் கூற முடியாது. எதையும் நிராகரித்து விடவும் முடியாது என்றார் பூடகமாக.