For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குமாரசாமி அரசுக்கு ஆதரவு வாபஸ்;ஆளுநரிடம் அறிவித்தது பாஜக!

By Staff
Google Oneindia Tamil News


பெங்களூர்:

குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விளக்கிக் கொள்வதற்கான கடிதத்தை கர்நாடக ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரை சந்தித்து இன்று பாஜக தலைவர்கள் வழங்கினர். குமாரசாமி அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டபடி அக்கட்சி ஆட்சியை தங்களிடம் ஒப்படைக்க மறுத்து விட்டதால் அதிருப்தி அடைந்த பாஜக, குமாரசாமி அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற நேற்று தீர்மானித்தது.

இதையடுத்து இன்று காலை துணை முதல்வர் எடியூரப்பா, பாஜக தலைவர் சதானந்த கெளடா, முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஆகியோர் தலைமையில் பாஜக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்றனர்.

முன்னதாக ஊர்வலம் செல்லும் வழியில் விதான் செளதா அருகே உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் எடியூரப்பா தலைமையில் பாஜக தலைவர்கள் ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரை சந்தித்து தங்களது ஆதரவு வாபஸ் கடிதத்தை வழங்கினர்.

அவரிடம், குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. அந்த அரசு ஒரு நிமிடம் கூட நீடிக்க அனுமதிக்கக் கூடாது. சட்டசபையைக் கலைத்து உத்தரவிட வேண்டும். குமாரசாமி அரசையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களுக்கு சேவை புரிய ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆட்சி மாற்றத்தைக் கோரினோம். ஒப்பந்தப்படியும் அவர்கள் நடந்து கொள்ளவில்லை. மக்களுக்கு சேவை புரியும் வாய்ப்பையும் மறுத்து விட்டார்கள்.

ஆளுநரை சந்திக்கிறார் குமாரசாமி:

இதற்கிடையே, சட்டசபையில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க நேரம் கேட்டு கோரிக்கை விடுக்க கர்நாடக ஆளுநரைச் சந்திக்க முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.

கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலை குறித்து விவாதிக்க மதச்சார்பற்ற ஜனதாதள சட்டசபைக் கட்சிக் கூட்டம் இன்று காலை நடந்தது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரை இன்று அல்லது நாளைக்குள் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். அவரிடம் எனது அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அவகாசம் தருமாறு கேட்கப் போகிறேன்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆளுநரை சந்திக்க எனக்கு எம்.எல்.ஏக்கள் அனுமதி அளித்துள்ளனர்.

பாஜகவுக்குள் சிலர் எனக்கு எதிராக செயல்பட்டதால்தான் ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைக்க முட்டுக்கட்டையாக அமைந்தது.

எனக்கு எதிராக பாஜக தலைவர்கள் சிலரே சதி செய்தனர். நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. தங்களது நோக்கத்தில் அந்தத் தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவெ கெளடாவுக்கும், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை விவரங்களை இதுவரை பாஜக வெளியிடவில்லை. ஏன் இதை அவர்கள் மறைக்க வேண்டும். தைரியம் இருந்தால் வெளியிட வேண்டியதுதானே.

மதச்சார்பற்ற ஜனதாதளம் தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளது. மக்கள் எங்களை ஆதரிப்பார்கள். பாஜகவின் முகத்திரையைக் கிழிப்போம் என்றார் குமாரசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X