பா.பி. மாநாட்டுக்கு வராத கார்த்திக்! தொண்டர்கள் கொந்தளிப்பு - கடையடைப்பு!!
ராஜபாளையம்:
ராஜபாளையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்வர்ட் பிளாக் கட்சியின் இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கு கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் வராததால் ஆத்திரமடைந்த கட்சித் தொண்டர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் ராஜபாளையத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. பெரும் பதட்டம் ஏற்பட்டது.
பார்வர்ட் பிளாக் கட்சியின் இளைஞர் பிரிவான அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பின் மாநில மாநாட்டுக்கு ராஜபாளையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜவகர் மைதானத்தில் மாநாடு நடைபெறும், நேரு சிலையிலிருந்து மைதானம் வரை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிஸ்வாஸ், மாநிலத் தலைவர் நடிகர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பிஸ்வாஸும் ராஜபாளையம் வந்து விட்டார். ஆயிரக்கணக்கான தொண்டர்களும், கார்த்திக் ரசிகர்களும் கூடியிருந்தனர். பேரணியும் புறப்படத் தயாராக இருந்தது. கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் அதிக அளவில் போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் கார்த்திக் வரவில்லை. நீண்ட நேரமாக காத்திருந்து பார்த்த தொண்டர்கள் ஒரு கட்டத்தில் கொந்தளித்தனர். கார்த்திக் வராததால் ஆத்திரமடைந்த அவர்கள் ரகளையில் இறங்கினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் கூட்டத்தினரை கலைந்து போகும்படி கூறினர். ஆனால் போலீஸார் மீது கூட்டத்தினர் கற்களை வீச ஆரம்பித்தனர். மேலும் மாநாடு நடைபெறும் இடத்தில் கூடியிருந்தவர்களும் ரகளையில் இறங்கினர்.
அங்கிருந்த டியூப் லைட்டுகளை அடித்து நொறுக்கினர். மேடை மீதும் கல் வீசப்பட்டது.
இந்தத் தகவல் நகரில் பரவியதால் நகர் முழுவதும் வேகம் வேகமாக கடைகள் அடைக்கப்பட்டன. நகரமே பந்த் நடப்பது போல வெறிச்சோடியது.
பார்வர்ட் பிளாக் கட்சியினர் வேறு வன்முறையில் இறங்கி விடக் கூடாது என்பதற்காக நகர் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பிஸ்வாஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு கடைசி நேரத்தில்தான் கார்த்திக் வராத தகவல் தெரிவிக்கப்பட்டது. கார்த்திக் இல்லாமல் கூட்டத்திற்குப் போனால் பிரச்சினையாகி விடும் என்பதால் மாநாட்டையே ரத்து செய்து விட்டனர். ஆனால் அதை உடனடியாக தொண்டர்களுக்கு அறிவிக்கவில்லை. இதுதான் தொண்டர்களை கொந்தளிக்க வைத்து விட்டது.
ஒரு கட்சியின் மாநாட்டை, அந்தக் கட்சியின் தலைவர் வராததால், மாநாட்டையே ரத்து செய்தது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாக இருக்கும்.












Click it and Unblock the Notifications