பெண் எம்எல்ஏவை முற்றுகையிட்ட கிராம மக்கள்
தூத்துக்குடி:
ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றுநீரை குடிநீருக்கு சப்ளை செய்யப்படாததை கண்டித்து அப்பகுதி மக்கள், எம்எல்ஏவை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து யூனியன் அனியாபரநல்லூர் பஞ்சாயத்திற்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்க சாயர்புரம்-பெருங்குளம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குழாய்கள் பதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது.
இதுவரை இந்த குழாய்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. ஆனால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பு பிரிவு ஆவணங்களில் குடிநீர் வழங்கப்படுவதாக முறைகேடாக குறிப்பிடப்பட்டு வருகிறது.
ஐந்து ஆண்டுகளாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்தும், தொகுதி எம்எல்ஏ இப்பிரச்சனையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் நேற்று அனியாபரநல்லூர் ஊராட்சியில் உள்ள அனியாபரநல்லூர், மீனாட்சிபட்டி ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஊராட்சி தலைவி சங்கரி தலைமையில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது அங்கிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஊர்வசி செல்வராஜை முற்றுகையிட்டனர். உடனடியாக குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரி அவர்கள் மனு கொடுத்தனர்.
இதன் பின்னரும் தொடர்ந்து இப்பிரச்சனையில் அலட்சியம் காட்டினால் உண்ணாவிரதம், சாலை மறியல் போன்ற போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று எம்எல்ஏவை கிராம மக்கள் எச்சரித்தனர்.
எம்எல்ஏவை முற்றுகையி்ட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications