இலங்கை மீனவர் கொலை - காவலர் சஸ்பெண்ட்
மதுரை:
மதுரை சிறை வாசலில் இலங்கை மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், சிறைக் காவலர் தேவராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த மீனவர் சங்கத் தலைவர் வர்ணகுல சூரிய கனிசியஸ் பெர்னாண்டோ மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு இலங்கை மீனவர்களைப் பார்க்க வந்தார்.
வழக்கமாக பார்வையாளர்கள் செல்லும் வழியில் செல்லாமல், முக்கிய கேட் வழியாக அவர் செல்ல முயன்றதால் அவருக்கும், சிறைக் காவல் பணியில் அப்போது இருந்த காவலர் தேவராஜுக்கும் இடையே பிரச்சினை உருவானது. ஒரு கட்டத்தில் தேவராஜை மீறி பெர்னாண்டோ உள்ளே நுழைய முயன்றதால் தற்காப்புக்காக பெர்னாண்டோவை சுட்டு விட்டார் தேவராஜ். இதில் பெர்னாண்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது. நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேவராஜ் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான உத்தரவை சிறைத்துறை டிஐஜி மூர்த்தி நேற்று மாலை பிறப்பித்தார். தேவராஜ் சர்ச்சைக்குரிய மரணம் என்ற பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கரிமேடு காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, ஆர்.டி.ஓ. நாராயணமூர்த்தி தனது விசாரணையை முடித்து விட்டார். இன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனது விசாரணை அறிக்கையை அவர் தாக்கல் செய்யக் கூடும் எனத் தெரிகிறது.
சகோதரரிடம் உடல் ஒப்படைப்பு:
இந்த நிலையில் பெர்னாண்டோவின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் நேற்று மாலை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி கொண்டு செல்லப்பட்டது.
உடலை பெர்னாண்டோவின் சகோதரர் ஜூடு நார்மன் பெர்னாண்டோ பெற்றுக் கொண்டார். அவருடன் இலங்கையைச் சேர்ந்த பாதிரியார் பயஸ், அகில இலங்கை புலம் பெயர்ந்த மீனவ மக்கள் தொழிலாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் மாக்ஸ்மன், இலங்கை துணைத் தூதரக அதிகாரி தசீம் ஆகியோர் வந்திருந்தனர்.
பின்னர் பெர்னாண்டோவின் உடலுடன் அவர்கள் திருச்சிக்கு ஆம்புலன்ஸில் பயணமானார்கள். அங்கிருந்து உடல் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications