வந்த வேலையை மறந்த அமைச்சர்! தலைகீழாக நடந்த அரசு விழா!!
கடையநல்லூர்:
அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அதை மறந்து விட்டு பேச்சை முடித்துக் கொண்டு கிளம்பினார். கடைசி நேரத்தில் அதிகாரிகள் நினைவூட்டவே அவசரம் அவசரமாக அடிக்கல்லை நாட்டி விட்டுச் சென்றார்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலத்தூரில் ரூ.1 கோடி செலவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாளகத்தில் 300 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டுவிழா மாவட்ட ஆட்சி தலைவர் கோ.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பசாமி பாண்டியன், பீட்டர் அல்போன்ஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்பாத்துரை எம்பி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழா மாலை ஆறரை மணிக்குத் தொடங்கியது. அனைவரும் சிறப்புரையாற்றினர். ஆனால் முதலில் "அடிக்கல் நாட்டு விழாவை" நடத்தாமல் மேடை பேச்சிலேயே முழுமையாக இருந்து விட்டு கூட்டம் முடிந்து இறை வணக்கமும் பாடி முடித்தனர்.
அதன் பின்னர்தான் அதிகாரிகளுக்கு இன்னும் அடிக்கல் நாட்டப்படவில்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து அமைச்சரிடம் அதைத் தெரிவித்தனர். அதன் பின்னர் எட்டரை மணிக்கு அடிக்கல்லை திறந்து வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து அமைச்சர் உள்ளிட்டோர் கிளம்பிச் சென்றனர்.
தலைகீழாக நடந்த இந்த அரசு விழாவைக் கண்டு விழாவுக்கு வந்தோர் புலம்பியபடி சென்றனர்.