முஷாரப்பின் பாதுகாப்பு ஹெலிகாப்டர் நொறுங்கி 4 பேர் பலி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப்புக்குப் பாதுகாப்பாக சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், 4 பாதுகாப்பு அதிகாரிகள் பலியானார்கள். முஷாரப்பின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ரஷீத் குரேஷி படுகாயமடைந்தார்.
இந்த விபத்து குறித்து ராணுவ தலைமை செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் வஹீத் அர்ஷத் கூறுகையில், அதிபர் முஷாரப் முசாபராபாத்துக்கு சென்று கொண்டிருந்தார். அவருக்குப் பாதுகாப்புக்காக எம்ஐ-17 ரக ஹெலிகாப்டரில் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர்.
முசாபராபாத் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் பலியானார்கள். அதிபரின் செய்தித் தொடர்பாளர் குரேஷி படுகாயமடைந்தார். அதிபர் சென்ற ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறங்கியது என்றார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி நடந்த பயங்கர நிலநடுக்கத்தில் 73 ஆயிரம் பலியானதன் நினைவு நாளையொட்டி முசாபராபாத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ளவே முசாபராபாத்துக்கு முஷாரப் சென்றார்.












Click it and Unblock the Notifications