சிறுநீரக திருட்டு: சென்னை டாக்டர் மும்பையில் கைது! சர்வதேச அளவில் நடந்த மோசடி அம்பலம்

Subscribe to Oneindia Tamil


சென்னை:

சர்வதேச அளவில் நடந்து வரும் மிகப் பெரிய சிறுநீரக திருட்டை மும்பை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த சிறுநீரகவியல் டாக்டர் ஒருவரையும் மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட டாக்டர் பழனிரவிச்சந்திரன் 2 நாட்களுக்கு முன்பு மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மும்பை காவல்துறை இணை ஆணையர் ராகேஷ் மரியா கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் பழனி ரவிச்சந்திரன் 2002ம் ஆண்டு முதல் இதுவரை 40 முதல் 100 சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.

இவர் அறுவைச் சிகிச்சை செய்தவர்கள் அனைவருமே வெளிநாடுகளைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் ஆவர். குறிப்பாக மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

ஒவ்வொருவரிடமும் ரூ. 10 முதல் 15 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளார் டாக்டர் பழனி ரவிச்சந்திரன். இவர்களுக்கு சிறுநீரகங்களைத் தானம் செய்த யாருமே நோயாளிகளின் உறவினர்கள் இல்லை. அனைவருமே நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து மோசடியாக சிறுநீரகங்கள் பெறப்பட்டுள்ளன, அதாவது திருடப்பட்டுள்ளன.

இந்த அறுவைச் சிகிச்சைகள் அனைத்துமே சென்னை தி.நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனை மற்றும் நியூ பாரதிராஜா மருத்துவமனை ஆகியவற்றில்தான் நடந்துள்ளன.

சென்னையில் 2 பங்களாக்கள் மற்றும் ஒரு ஃபிளாட்டை வாடகைக்கு எடுத்துள்ளார் டாக்டர் பழனி ரவிச்சந்திரன். இங்குதான் சிறுநீரகங்களைத் தானம் தருவோரை அவர் தங்க வைத்துள்ளார். மகாராஷ்டிராவிலிருந்து சிறுநீரகம் தர வருவோரை, மகாராஷ்டிரா பங்களா என்று பெயரிடப்பட்ட பங்களாவில் அவர் தங்க வைத்துள்ளார்.

இந்தியா தவிர இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்தும் சிறுநீரகங்களை பெற்றுள்ளார் அவர். சிறுநீரகங்களைத் தருவோருக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகபட்சமாக ரூ. 30 ஆயிரம் மட்டுமே தரப்பட்டுள்ளது என்றார் ராகேஷ் மரியா.

ஆனால் இதை பாரதிராஜா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சி.நடேசன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டாக்டர் பழனி ரவிச்சந்திரன் எங்களது மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரை வாடகைக்குத்தான் பயன்படுத்தியுள்ளார். தனது நோயாளிகளை ஓரிரு நாட்களில் இங்கிருந்து அழைத்துக் கொண்டு போய் விடுவார்.

அவரது மருத்துவ ஆலோசனைகள், ஆய்வுகள், சோதனைகள் அனைத்தும் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில்தான் அவர் நடத்துவது வழக்கம் என்றார்.

இந்த மோசடி தொடர்பாக ஏஜென்ட்டுகள் முகம்மது ஹனீப், சந்தீப், மனோஜ் துளசிசந்த், ஷமீம் அகமது குரேஷி ஆகியோரையும் மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பல பெண்களிடம் ஒரு மோசடிக் கும்பல் சிறுநீரகங்களைத் திருடி விற்றதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தக் கும்பலுக்கும், டாக்டர் பழனி ரவிச்சந்திரனுக்கும் தொடர்பு இருக்கலாம் என சென்னை போலீஸார் சநதேகிக்கின்றனர்.

சென்னை சிறுநீரக மோசடிக் கும்பலுக்கும், டாக்டர் பழனி ரவிச்சந்திரனுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கவும் சென்னை போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக பழனி ரவிச்சந்திரனை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்கவும் சென்னை போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+