கர்நாடகத்தில் புது திருப்பம்: ஆட்சி அமைக்க குமாரசாமியின் ஆதரவு கோரும் பாஜக!
ஷிமோகா (கர்நாடகம்)
ஆட்சி மாற்றம் தொடர்பாக வாக்குறுதியிலிருந்து தவறி விட்டதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி நினைத்தால், பாஜக ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு தந்து தனது தவறைத் திருத்திக் கொள்ளலாம் என்று முன்னாள் துணை முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளதால் கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஷிமோகாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர்களை பாஜக அணுகாது.
தான் கொடுத்த வாக்குறுதியிலிருந்து தவறி விட்டதாக குமாரசாமி நினைத்தால், நாங்கள் ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு தர அவர் முன்வர வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்களது தவறைத் திருத்திக் கொள்ளலாம்.
அவர்கள்தான் சொன்னபடி ஆட்சியை ஒப்படைக்க முன்வரவில்லை. எனவே பாஜக ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதாதளம் நிபந்தனையற்ற ஆதரவைத் தர முன்வர வேண்டும்.
பாஜகவில் சேர விரும்பும் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்கள் தாராளமாக வரலாம், அவர்களை திறந்த மனதுடன் நாங்கள் வரவேற்போம். ஜனநாயக நெறிமுறைகளைக் காக்க அவர்கள் பகிரங்கமாக பாஜகவுக்கு வர வேண்டும்.
ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ஒருபோதும் கோர மாட்டோம். பாஜக - மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சி நடந்தபோது, சட்டசபையைக் கலைக்க வேண்டும் என கோரியது காங்கிரஸ். எனவே அவர்கள் இப்போது மக்களை சந்திக்க வேண்டும். மாறாக, குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயலக் கூடாது. எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தில் ஈடுபடக் கூடாது.
குமாரசாமியையும், அவரது தந்தை தேவெ கெளடாவையும் கர்நாடக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றார் எடியூரப்பா.












Click it and Unblock the Notifications