டிஐஜி வீட்டு வேலைக்கு சென்ற கைதி தப்பி ஓட்டம்
திருச்சி:
திருச்சி சிறைத்துறை டிஐஜியின் வீட்டிற்கு வேலைக்கு சென்ற கைதி தப்பி ஓடிவிட்டார்.
சிறைத்துறையை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகள் மற்றும் சிறை வளாகப் பணிகளுக்கு ஆயுள் தண்டனை கைதிகளை பயன்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
திருச்சியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை டிஐஜியாக இருப்பவர் எஸ்ரா. இவருடைய வீட்டு வேலைக்கு கைதிகள் அனுப்பப்பட்டனர்.
வேலை முடிந்து மாலையில் அனைத்து கைதிகளும் சிறைக்கு திரும்பினர். அதில் மோகன் என்ற கைதி மட்டும் வரவில்லை. இதனால் பதட்டம் அடைந்த சிறைத்துறை காவலர்கள் டிஐஜியின் வீடு மற்றும் அப்பகுதிகளில் தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை.
டிஐஜியின் வீட்டிற்கு வேலைக்கு சென்ற இடத்திலிருந்து மோகன் தப்பிவிட்டது தெரியவந்தது.
பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மோகனுக்கு கடந்த ஜூன் 13ம் தேதி திருட்டு வழக்கு சம்பந்தமாக 2 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சிறை வளாகப் பணிகளுக்கு ஆயுள் தண்டனை கைதிகள் தான் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால் மோகன் ஆயுள் தண்டனை கைதி கிடையாது. இந்நிலையில் அவர் தப்பி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.