தலைவர் பதவியிலிருந்து விலகத் தயார் - கார்த்திக்
சென்னை:
பார்வர்ட் பிளாக் கட்சிக்கு என்னை விட சிறந்த தலைவர் இருப்பதாக தெரிவித்தால், நிச்சயம் நான் அந்தப் பதவியிலிருந்து விலகிக் கொள்வேன் என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே முதல் முறை என்று கூறும் அளவுக்கு, பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கு அதன் தலைவரான கார்த்திக்கே வரவில்லை. இதனால் ராஜபாளையத்தில் நடப்பதாக இருந்த அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது. இதனால் கொந்தளித்த தொண்டர்கள் பெரும் ரகளையில் இறங்கினர்.
கார்த்திக்கின் இந்த திடீர் போக்கால் பார்வர்ட் பிளாக் கட்சி கலகலத்துப் போய்க் கிடக்கிறது. இந்த நிலையில் ராஜபாளையம் மாநாட்டுக்கு வராதது ஏன் என்பது குறித்து கார்த்திக் விளக்கம் அளித்து அறிக்கை விட்டுள்ளார்.
அதில், சரணாலயம் நற்பணி இயக்கம் தொடங்கியது முதல் பார்வர்ட் பிளாக்கின் தலைவராக நான் இன்று வரை இருப்பது தொண்டர்களின் அன்பினால்தான். அதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
கடந்த 7ம் தேதி ராஜபாளையத்தில் நடந்த இளைஞர் அணி ஊர்வலத்தில் நான் கலந்து கொள்ள ஆர்வத்துடன் இருந்தேன். என் அரசியல் வாழ்க்கை அங்குதானே தோன்றியது. அதை நான் மறுபடியும் பிறந்த ஊராகக் கருதுகிறேன்.
அங்கே தற்போது சர்ச்சையில் இருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றியும், அணு சக்தி ஒப்பந்தம் குறித்தும் எனது கருத்துக்களை தொண்டர்களுடன் பகிர்ந்து கொள்ள இருந்தேன்.
ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையாரம், முக்கியமானதொரு அரசியல் காரணமாகவும், சில பேரின் தன்னிச்சையான செயல்களாலும் என்னால் அங்கு வர இயலாமல் போனது.
இதனால் தொண்டர்கள் அடைந்த மன வேதனையை விட நான் பல மடங்கு வேதனை அடைந்தேன். ஆனால் நான் வராததற்கான காரணத்தை தொண்டர்களிடம் விளக்குவேன். தேவர் குரு பூஜைக்கு முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னரோ கண்டிப்பாக விளக்குவேன்.
இனிமேல் எந்தக் கூட்டமாக இருந்தாலும், நான் உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டால் மட்டுமே தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். குரு பூஜைக்காக மதுரைக்கு வருகிற 27ம் தேதி போகிறேன். 31ம் தேதி வரை அங்குதான் இருப்பேன். எனது பயண விவரம் 15ம் தேதிக்கு தெரிவிக்கப்படும்.
என்னை தலைவர் பதவியிலிருந்து அகற்ற சிலர் முயற்சிக்கிறார்கள். இந்த எண்ணத்துடன் செயல்படுகிறார்கள். இது எனக்கு வேதனை தருகிறது. எனக்குப் பதவி ஆசை ஒருபோதும் கிடையாது. என்னை விட சிறந்த தலைவர் இருப்பதாக தெரிவித்தால் நிச்சயம் நான் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கார்த்திக்.












Click it and Unblock the Notifications