சாலையை சீரமைக்க வலியுறுத்தி பின்னோக்கி நடந்து நூதனப் போராட்டம்
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி - கக்கனாலா தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி கூடலூரைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் ஊட்டியில், பின்னோக்கி நடந்து நூதனப் போராட்டத்தை நடத்தினர்.
ஊட்டி - கக்கனாலா தேசிய நெடுஞ்சாலை படு மோசமாக இருப்பதால் வாகனதாரர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அடிக்கடி விபத்துக்களும் நடக்கின்றன.
இந்த சாலையைப் பரமாரிக்க வேண்டிய பொறுப்பு மத்திய நெடுஞ்சாலைத் துறையிடம் உள்ளது. ஆனால் சாலையைப் பராமரிக்க ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதனால் கோபமடைந்த கூடலூர் பகுதி மக்கள் 2000க்கும் மேற்பட்டோர், போராட்டத்தில் குதிக்க தீர்மானித்தனர்.
வழக்கமான போராட்டமாக இருந்தால் கவனிப்புக்கு ஆளாகாமல் போய் விடும் என்பதால் பின்னோக்கி நடந்து நூதனப் போராட்டம் நடத்த தீர்மானித்தனர்.
ஊட்டி நகராட்சி அலுவலகத்திலிருந்து புதிய பஸ் நிலையம் வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அனைவரும் பின்னோக்கி நடந்து வந்தனர்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.
இன்னும் ஒரு வாரத்திற்குள் சாலையை சீரமைக்காவிட்டால், 12 மணி நேர பந்த் நடத்தவும் மக்கள் தீர்மானித்துள்ளனர். அதற்கும் பலன் இல்லாவிட்டால் 24 மணி நேர பந்த், 72 மணி நேர பந்த் என பல திட்டங்களை மக்கள் வகுத்துள்ளனர்.
இந்த நூதனப் போராட்டத்தில் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.