சென்னை-தூத்துக்குடியில் இரு கொலைகள்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அதிமுக கிளைச் செயலாளரின் அண்ணன் மர்ம கும்பலால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ராஜபாண்டிநகரை சேர்ந்தவர் அருணாசலம். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் இன்று அதிகாலை திருச்செந்தூர் ரோட்டில் உள்ள பெரியசாமி நகர் உப்பளம் பகுதியில் கை, கால் மற்றும் தலை உள்ளிட்ட பல பகுதிகளில் வெட்டு காயத்துடன் பிணமாக கிடந்தார்.
அருணாசலத்தின் மனைவி திருமணமான சில நாட்களில் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இவரது தம்பி ஆறுமுகம் ராஜபாண்டி நகர் அதிமுக செயலாளராக இருக்கிறார். அருணாசலம் கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகில் நாயை கட்டி போட பயன்படும் இரும்பு சங்கிலி ஒன்று கிடந்தது.
எனவே நள்ளிரவில் அவரை கடத்தி வந்த மர்ம நபர்கள் இரும்பு சங்கிலியால் கழுத்தை நெரித்து மயக்கமாக்கிவிட்டு வெட்டி கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சென்னையில் சாராய வியாபாரி கொலை:
இந் நிலையில் சென்னையில் சாராய வியாபாரி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருமைராஜ் (24). கள்ளச் சாராயம் விற்று வந்த அருமைராஜ், சமீபகாலமாக மீன்பாடி வண்டி ஓட்டி வந்தார்.
இந் நிலையில் இன்று காலை அருமைராஜ் பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் உள்ள மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், அருமைராஜ் கடந்த 3 வருடங்களாக புளியந்தோப்பை சேர்ந்த ஜானகி என்பவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். ஜானகியுடன் சுரேஷ் என்பவரும் தொடர்பு வைத்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
அருமைராஜ் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் அப்பன்னா, துரை ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மேலும் சுரேஷ், புளியங்கொட்டை இளங்கோ, கள்ளக் காதலி ஜானகி ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.