ஜெர்மன்-பிரான்ஸ் விஞ்ஞானிகளுக்கு இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம்:
இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள் இணைந்து பெறுகின்றனர்.
இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற அமெரிக்காவைச் சேர்ந்த மரியோ கபேச்சி, ஆலிவர் ஸ்மித்ஸ் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த மார்ட்டின் இவான்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஜீன் டார்கெட்டிங் என்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் ஜீன்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய முடியும்.
இந்த மூன்று பேரும் தற்ேபாது எலிகளில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றி கொண்டுள்ளனர். இந்தப் புதிய ஜீன் தொழில்நுட்பம் மூலம், புற்றுநோய், உடல் பருமன், இதய நோய்கள், சர்க்கரை வியாதி, மூட்டு வலி, வயோதிகம், பார்கின்சன்ஸ் நோய், பதட்டம் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.
மருத்துவத்திற்கான நோபல் பரிசின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ. 8.08 கோடியாகும்.
அதே போல இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
ஜெர்மனியைச் சேர்ந்த பீட்டர் குரூயன்பர்க் மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த ஆல்பர்ட் பிரெட் ஆகியோருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. கம்ப்யூட்டர் டேட்டா சேமிப்பில் பெரும் புரட்சியைப் படைத்துள்ள மேக்னடோரெசிஸ்டென்ஸ் கண்டுபிடிப்புக்காக இவர்களுக்கு நோபல் கிடைத்துள்ளது.
இவர்களின் கண்டுபிடிப்பினால், ஹார்ட் டிஸ்க்கின் அளவு மேலும் மிக மிகச் சிறியதாக மாறிவிட்டது. நேனோ டெக்னாலஜியை அடிப்படையாகக் கொண்டது இவர்களின் கண்டுபிடிப்பு.
இந்தத் தொழில்நுட்பத்தின் காரணமாக, ஐபாட், ஐடச், பென்டிரைவ், செல்போன்கள், லேப்டாப் மற்றும் டிவிடி ஆகியவற்றில் முன்பைக் காட்டிலும் பல மடங்குத் தகவல்களை சேமித்து வைக்க முடியும்.
இரு விஞ்ஞானிகளும் பரிசுத் தொகையான ரூ. 6.08 கோடியை சமமாக பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
வேதியியலுக்கான நோபல் பரிசு:
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெரார்ட் எர்ல் வேதியியல் துறைக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்ஃபேஸ் கெமிஸ்ட்ரியில் இவர் செய்த ஆய்வுக்காக இந்த பரிசு கிடைத்துள்ளது. திடப் பொருட்கள் மீது மூலக்கூறுகள் மோதும்போது என்ன நடக்கிறது என்பதுதான் இவரது ஆய்வு. அறிவியல் உலகின் முக்கியமான துறையாக இந்த சர்ஃபேஸ் கெமிஸ்ட்ரி வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எர்லுக்கு 1.54 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை பரிசாக கிடைக்கவுள்ளது.
71 வயதாகும் எர்ல், பெர்லினில் உள்ள மாக்ஸ் பிளாங்க் ஜெசல்ஷாப்ட் பல்கலைக்கழகத்தின் பிரிட்ஸ் - ஹேபர் கழகத்தின் முன்னாள் இயக்குநர் ஆவார்.
இதுவரை இயற்பியல், மருத்துவம் மற்றும் வேதியியல் துறைக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் இலக்கியம், அமைதி ஆகிய இரு பிரிவுகளுக்கு பரிசுள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது.
ரவி சங்கருக்கு நோபல் கிடைக்குமா?:
அமைதிக்கான நோபல் பரிசு வருகிற வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
இந்த விருதுக்கு இந்தியாவின் சிதார் மேதை ரவிசங்கர், முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் முகம்மது அலி, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உள்ளிட்ட 150 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
நோபல் பரிசுகள் வருகிற டிசம்பர் மாதம் 10ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் கண்கவர் விழாவில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசு வரலாறு:
ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல், மிகச் சிறந்த விஞ்ஞானி. 1866ம் ஆண்டு டைனமைட்டைக் கண்டுபிடித்தார் நோபல். அறிவியலில் மட்டுமல்லாது சமூகவியல், அமைதி உள்ளிட்ட பல துறைகளிலும் மிகுந்த ஆர்வம் ெகாண்டிருந்தவர் நோபல்.
தனது பெயரில் அறிவியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் சமாதானம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என உயில் எழுதி வைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து நோபலின் பெயரில் 1895ம் ஆண்டு இந்த பரிசு உருவாக்கப்பட்டது. அடுத்த ஆண்டே நோபல் மரணமடைந்தார்.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
நோபல் உருவாக்கிய விருது அன்று முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த ரவீந்திரநாத் தாகூர் (இலக்கியம், 1913), சர் சி.வி.ராமன் (இயற்பியல், 1930), ஹர் கோபிந்த் குராணா (மருத்துவம், 1968), அன்னை தெரசா (அமைதி, 1979), டாக்டர் எஸ்.சந்திரசேகர் (இயற்பியல், 1983), அமார்த்யா சென் (பொருளாதாரம்) ஆகியோர் நோபல் பரிசினை வென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications