கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை மரணம்
பெங்களூர்:
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
84 வயதான பொம்மை ஜனதா, ஜனதாதளம் ஆகிய கட்சிகளில் முக்கியப் பங்கு வகித்தவர். ராமகிருஷ்ண ஹெக்டே, தேவெ கெளடா ஆகியோர் முதல்வர்களாக இருந்தபோது அவர்களது அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை வகித்துள்ளார்.
1988ம் ஆண்டு இவர் கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போது 1989ம் ஆண்டு பொம்மை அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இதை எதிர்த்து பொம்மை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மிகவும் தாமதமாக தீர்ப்பு வெளியானது. ஆனால் பொம்மை வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புதான் இன்று பல மாநில அரசுகள் தேவையில்லாமல் டிஸ்மிஸ் ஆவதிலிருந்து காத்து வருகிறது.
பொம்மை அரசை டிஸ்மிஸ் செய்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இனிமேல் ஒரு அரசைக் கலைப்பதாக இருந்தால் அதற்கு பல விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது.
இந்தியா முழுவதும் இவ்வாறாக புகழ் பெற்ற எஸ்.ஆர்.பொம்மை சமீப காலமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார். நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மரணமடைந்தார்.
பொம்மைக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட அடுத்த நாள் மரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications