கலெக்டரிடம் தஞ்சமடைந்த கவுன்சிலர்கள்
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சித் தலைவர் சங்கர நாராயணன் தங்களை மிரட்டுவதாக கூறி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் 10 கவுன்சிலர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
வள்ளியூர் டவுண் பஞ்சாயத்து தலைவராக பதவி வகிப்பவர் சங்கர நாராயணன். இவர் சுயேட்சையாக போட்டியிட்டு திமுகவில் இணைந்தவர்.
இவர் மீது, தன்னிச்சையாக செயல்படுகிறார். இது வரை நடந்த 8 சாதாரண கூட்டங்கள், 2 அவசர கூட்டங்களின்போது, தீர்மானங்கள் மீது கவுன்சிலர்களின் ஆதரவை கேட்காமல் தானே ஆதரவு தெரிவித்து எழுதிக் கொள்கிறார். எனவே அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று கோரி கவுன்சிலர்கள் 10 பேர் கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி நெல்லை மண்டல டவுண் பஞ்சாயத்து உதவி இயக்குனர் லட்சுமி காந்தனிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து ஜூலை 26ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு உதவி இயக்குனர் லட்சுமி காந்தன் தலைமையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்று உதவி இயக்குனர் உடல் நிலை காரணமாக விடுப்பில் சென்று விட்டதால் கூட்டம் நடத்தப்படவில்லை. அதன் பின்னர் ஆகஸ்ட் 17ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.
அதன் பின்னர் செப்.14ம் தேதி கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றும் கூட்டம் நடக்கவில்லை.
இந்நிலையில் பேரூராட்சியைச் சேர்ந்த 10 கவுன்சிலர்கள் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர்.
அதில், 10 கவுன்சிலர்களும் ராஜினாமா செய்வோம் என கவுன்சிலர் மாடசாமி கூறியதால் அவரை போனில் தொடர்பு கொண்ட பேரூராட்சித் தலைவரின் உறவினர்கள் 3 பேர், 10 கவுன்சிலர்களுக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. 10 கவுன்சிலர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவதுடன் மிரட்டல் விடுத்த மூவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications