புலிகளுக்காக நார்வேயிலிருந்து சென்னைக்கு வந்த கருவிகள்: வி.சி. பிரமுகர் கைது
சென்னை:
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்த உதவி செய்ததாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு கைது செய்யப்பட்டுள்ளார். க்யூ பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.

விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் இருந்து கடல் வழியாக ஆயுதங்களும் உதிரிப் பாகங்களும் கடத்தப்பட்டு வருவதாக மத்திய உளவுத் துறையான ஐபி எச்சரிக்கை விடுத்துள்ளதால் தமிழக கடலோர பகுதிகளில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த கப்பலில் இருந்து வன்னியரசுவின் பெயருக்கு நார்வே நாட்டில் இருந்து இரண்டு பார்சல்கள் வந்திறங்கின. அவற்றில் விசைப் படகுகளில் பொருத்தப்படும் புரொப்பல்லர்கள் இருந்தன.
மேலும் சிறிய நீர்மூழ்கி கப்பல்களில் பயன்படுத்தப்படும் கருவிகளின் உதிரிப் பாகங்கள், மோட்டார்கள் ஆகியவையும் இருந்தன. இது குறித்து துறைமுகக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த உளவுப் பிரிவு போலீசார் க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் தந்தனர்.
இதையடுத்து க்யூ பிரிவு போலீசார் அந்த பார்சல்களை கைப்பற்றியதோடு, வன்னியராசுவிடம் தீவிர விசாரணை நடத்தி அவரைக் கைது செய்தனர். இதை வன்னியரசு விடுதலைப் புலிகளுக்கு அனுப்ப இருந்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
தகவல் அறிந்த மத்திய உளவுப் பிரிவான ஐ.பியும் விசாரணையில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து கியூ பிரிவு போலீஸ் எஸ்.பி. அசோக்குமார் கூறுகையில்,
நார்வே நாட்டில் இருந்து கோகுலன் என்ற இலங்கை தமிழர் படகு உதிரி பாகங்களை வன்னியரசு என்ற பெயரில் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து வன்னியரசிடம் விசாரித்தோம். அப்போது அவர் சுனாமி பாதித்த பகுதிகளுக்கு படகுகளை தயாரிப்பதற்காக இவற்றை தனக்கு கோகுலன் அனுப்பியதாக கூறினார். ஆனால் அந்த பார்சலில் இருந்த இயந்திரங்கள் சாதாரண படகுகளில் பயன்படுத்தவது போல் தெரியவில்லை. அவை அதிவேக படகுகளில் பயன்படுத்த கூடியவை.
மேலும் இந்த உதிரிப் பாகங்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக இங்கே கொண்டு வரப்பட்டது என்பதும் தெரிய வந்தது.
கொலை வழக்கு ஆயுள் கைதியான வன்னியசு ஜாமீனில் தான் வெளியே வந்துள்ளார்.
இவரிடம் இருந்து பாஸ்போர்ட்டையும் கைப்பற்றி உள்ளோம். புலிகளுக்கு உதிரிப் பாகங்களை இலங்கைக்கு கடத்த முயன்றதாக வன்னியரசை கைது செய்துள்ளோம் என்றார்.
வன்னியரசிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,
கடந்த 1997ம் ஆண்டு நான் மதுரை சிறையில் இருந்த போது கருப்பையா எனும் விடுதலைப் புலியுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. தற்போது கருப்பையா வெளிநாடுகளில் தங்கி இருந்து விடுதலைப்புலிகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி அனுப்புகிறார். அவர்தான் இந்த உதிரிப் பாகங்களை கோகுலன் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இதை நான் புலிகளுக்கு கடத்த திட்டமிட்டிருந்தேன். 2005ம் ஆண்டு மூன்று முறை இலங்கை சென்று வந்துள்ளேன் என்று கூறியுள்ளார் வன்னியரசு.
இன்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள வன்னியரசுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications