சிறுநீரக மோசடி டாக்டர் வீட்டில் அதிரடி சோதனை!
சென்னை:
நூற்றுக்கணக்கான பேரிடம் சிறுநீரகங்களை மோசடியாக எடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மும்பையில் கைது செய்யப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த டாக்டர் பழனி ரவிச்சந்திரனின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த சிறுநீரகவியல் நிபுணரான டாக்டர் பழனி ரவிச்சந்திரன், நூற்றுக்கணக்கான பேரிடம் மோசடியாக சிறுநீரகங்களை எடுத்து பெரும் பணம் சம்பாதித்து மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனை மற்றும் நியூ பாரதிராஜா மருத்துவமனை ஆகியவற்றில்தான் இந்த அறுவைச் சிகிச்சைகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு டாக்டர் பழனி ரவிச்சந்திரன் மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
சிறுநீரக மோசடி மூலம் டாக்டர் ரவிச்சந்திரன் பல கோடி ரூபாய் அளவுக்கு பணம் பார்த்திருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில், முகலிவாக்கத்தில் உள்ள டாக்டரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.
மேலும் 2 டாக்டர்கள் சிக்குகிறார்கள்
டாக்டர் ரவிச்சந்திரனின் சிறுநீரக திருட்டுக்கு முக்கிய உதவியாக இருந்தவர் சந்தீப். இவரும் மும்பை போலீஸில் சிக்கியுள்ளார். இவர்தான் ரவிச்சந்திரனின் ஏஜென்டாக செயல்பட்டு வந்துள்ளார்.
2002ம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான ஏழைகளை ஏமாற்றி ரவிச்சந்திரனிடம் அனுப்பி வைத்துள்ளார். அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் தருவதாக கூறி மோசடி செய்து சில ஆயிரங்களை மட்டும் கொடுத்து சிறுநீரகங்களை திருடியுள்ளது இக்கும்பல்.
சிறுநீரக மோசடிக் கும்பலின் தலைவன் போல செயல்பட்டுள்ளார் டாக்டர் ரவிச்சந்திரன். தனது மருத்துவத் தொழிலுக்கே களங்கம் விளைவிப்பது போல அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
டாக்டர் ரவிச்சந்திரன் மீது இதுவரை 12 பேர் புகார் கூறியுள்ளனர். அதன் பேரில்தான் தற்ேபாது வருமான வரி சோதனை நடந்துள்ளது. முதலில் வீடு பூட்டப்பட்டிருந்தது. இருப்பினும் வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டைக்குள் சென்று சோதனை நடத்தினர். பின்னர் வீட்டையும் பூட்டி சீல் வைத்தனர்.
சென்னையில் டாக்டர் ரவிச்சந்திரனுக்கு நல்ல பெயர் உள்ளதாம். ஆனால் அவரே இப்படி ஒரு பெரும் மோசடியில் ஈடுபட்டிருப்பது சென்னை மருத்துவத் துறையை அலற வைத்துள்ளது.
ரவிச்சந்திரன் செயின்ட் தாமஸ் மருத்துவமனை மற்றும் பாரதிராஜா மருத்துவமனைகளைத்தான் தனது மோசடிச் செயலுக்குப் பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து செயிண்ட் தாமஸ் மருத்துவமனை மூத்த டாக்டர் ஒருவர் கூறுகையில், இந்த ஆஸ்பத்திரியில் வைத்து டாக்டர் ரவிச்சந்திரன் எந்த கிட்னி ஆபரேஷனும் செய்தது இல்லை.
ஆபரேஷனுக்கு முன்பு நடத்தப்படும் சில சோதனைகளை மட்டும் இங்கு செய்வார். அதற்கான ஆவணங்களை கூட அவர் இங்கு வைக்கவில்லை என்றார்.
செயிண்ட்தாமஸ் மருத்துவ மனை சிறுநீரக நிபுணர் டாக்டர் நடராஜன் சில சமயம் டாக்டர் ரவிச்சந்திரனுக்கு உதவுவது உண்டு. தற்போது டாக்டர் நடராஜன் மும்பை சென்றுள்ளார். மும்பை போலீசாரிடம் அவர் டாக்டர் ரவிச்சந்திரன் குறித்து தகவல்களை தெரிவிப்பார் என்று தெரிய வந்துள்ளது.
டாக்டர் ரவிச்சந்திரன் கிட்னி ஆபரேஷன்களை எந்த மருத்துவமனைகளில் நடத்தினார் என்று தெரிய வில்லை. அதை கண்டு பிடிக்க விசாரணை நடந்து வருகிறது. டாக்டர் ரவிச்சந்திரன் சிறுநீரக மருத்துவர்தான். அறுவை சிகிச்சை நிபுணர் அல்ல.
இதனால் அவர் கிட்னி அறுவை சிகிச்சைக்கு 2 அறுவை சிகிச்சை டாக்டர்களின் ஒத்துழைப்பை பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கும் கிட்னி மோசடியில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக் கப்படுகிறது. இதையடுத்து அந்த இரண்டு டாக்டர்களுக்கும் மும்பை போலீசார் வலை விரித்துள்ளனர்.
டாக்டர் ரவிச்சந்திரன் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக சொந்தமாக ஒரு குழுவை வைத்திருந்ததாக தெரிகிறது. இந்த குழுவில் டாக்டர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், நர்சுகள் பலர் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் பற்றிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்த மும்பை போலீசார் தீர்மானித் துள்ளனர்.
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக திருட்டு குறித்த பயங்கரத் தகவல்கள் வெளியாகி மாநிலத்தையே அதிரடித்தது. ஆனால் ஆரம்பத்தில் போலீஸார் வேகமான நடவடிக்கையைக் காட்டினர். ஆனால் டாக்டர்கள் யாரும் அப்போது கைது செய்யப்படவில்லை. அந்த வழக்கு அப்படியே தொய்வடைந்து போய் விட்டது.
ஆனால் மும்பை போலீஸார் அதிரடியாக செயல்பட்டு டாக்டர் பழனி ரவிச்சந்திரனைக் கைது செய்துள்ளனர். இதனால் சென்னை போலீஸாரின் நடவடிக்கை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications