4 வழி சாலையாகிறது ஈ.சி.ஆர்.
சென்னை:
சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்த முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
பல்வேறு நெடுஞ்சாலைத் துறை திட்டப் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலைத் துறை செயலாளர், நிதித் துறை செயலாளர், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு கடல்சார் வாரிய தலைமைச் செயல் அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி ஆய்வு நடத்தினர்.
அதில் அரசு சாலைகளை மேம்படுத்தும் பணிகளுக்கு ரூ. 2,625 கோடியும், பராமரிப்புப் பணிகளுக்கு ரூ. 723 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் 7,200 கி.மீ. நீள சாலைப் பணிகளையும், புதுப்பிக்கப்பட்டு வரும் 9,000 கி.மீ. நீளச் சாலைப் பணிகளையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கவும் கருணாநிதி உத்தரவிட்டார்.
ஒரகடம் தொழில் பூங்கா பகுதியில் ரூ. 300 கோடி மதிப்பில் 4 வழித் தடச் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
ரூ. 70 கோடி மதிப்பில் திருப்பூர் நகரில் சுற்றுச்சாலை பணியையும், ரூ. 27 கோடியில் கோயம்புத்தூர் அவினாசி சாலையை 6 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணியையும், மதுரை வட்டச் சாலைகள் திட்டத்தின் 2ம் கட்டப் பணியையும் இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கவும் உத்தரவிட்டார்.
சென்னை அடையாறு மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரையிலான 20 கி.மீ. நீள ராஜீவ்காந்தி சாலையை வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளை விரைவாகவும், ரூ.600 கோடி மதிப்பீட்டிலான சாலை மற்றும் பாலப் பணிகள் முழுவதையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
மேலும் கிழக்குக் கடற்கரை சாலையை 4 வழிச் சாலையாக மாற்றுவதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறும் கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications