சேது சமுத்திர திட்டம் முடிந்து போன கதை-ஜெ
சென்னை:
சேது சமுத்திர திட்டம் என்பது ஒரு முடிந்து போன கதை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேது சமுத்திர திட்டம் ஒரு முடிந்து போன கதை, இனி அதை தொடர்வதற்கு வாய்ப்பே இல்லை என்பது கருணாநிதிக்கு நன்கு தெரிந்தும் இந்தத் திட்டத்தைப் பற்றி கூறி வருகிறார்.
சேது சமுத்திரக் கால்வாய் அமைய உள்ள கடல் பகுதியில் சதா வீசிக் கொண்டிருக்கின்ற காற்றின் தன்மை, சில சமயங்களில் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடிய புயல் காற்றின் தன்மை, அலைகளின் ஆர்ப்பரிப்பு, கடலுக்கு அடியில் ஓடுகின்ற நீரோட்டம், மணலின் தன்மை,
ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு அடித்துச் செல்லும் மணலின் அளவு, இவ்வகை இயற்கை விளைவுகளை எதிர்கொண்டு மேற்படி கால்வாயைத் தோண்ட வேண்டிய ஆழம், அகலம், அதனை அன்றாடம் பராமரிக்க வேண்டிய ஏற்பாடுகள், இவைகளுக்கு ஆகும் செலவு எவ்வளவு,
தொடர்ந்து ஏற்படும் பராமரிப்புச் செலவு எவ்வளவு, இதையும் மீறி வரக் கூடிய மொத்த வருவாய் எவ்வளவு, அது லாபகரமாக இருக்கு, என்ற பொருளாதார கணக்கீடுகளைப் பற்றி எல்லாம் உரிய முறையில் ஆராயாமல், சொந்த லாபத்தை மட்டுமே கணக்கிட்டு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
கால்வாயின் மொத்த ஆழம் 12 மீட்டர் அல்லது 36 அடி மட்டுமே ஆகும். இதில் 30,000 டன்னுக்கும் எடை குறைவாக உள்ள கப்பல்கள்தான் போக முடியும். ஆனால், தற்போது 1,50,000 டன்னுக்கும் அதிகமாக உள்ள பிரம்மாண்டமான கப்பல்கள்தான் கட்டப்பட்டும், அதிக அளவில் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன.
இவ்வகை கப்பல்கள் இக்கால்வாயில் செல்ல முடியாது. இதனால்தான் கடல் சார்ந்த பொறியியல் வல்லுனர்கள் 150 ஆண்டு கால கனவுத் திட்டக் கால்வாயில், 150 ஆண்டு காலத்திற்கு முந்தைய கப்பல்களைத்தான் கொண்டு செல்ல இயலும் என்று கிண்டலாக சொல்கிறார்கள்.
அதிக எடை கொண்ட கப்பல்கள் செல்லக் கூடிய அளவில் கால்வாயின் ஆழமோ அல்லது அகலமோ கொண்ட திட்டமாக இது செயல்படுத்தப்படவில்லை என்பது இத்திட்டத்தில் உள்ள மிகப்பெரிய குறைபாடு.
மத்திய அரசு அரைகுறையாக இத்திட்டத்தினை ஆரம்பித்து, கடலில் கரைத்த பெருங்காயமாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவிட வழி வகுத்ததைத் தவிர இத்திட்டத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை பலனும் இல்லை.
கருணாநிதியும், டி.ஆர். பாலுவும் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.
இதுவரை தோண்டிய கால்வாயின் மொத்த நீளம் எவ்வளவு? ஆழம் எவ்வளவு? இதுவரை தோண்டப்பட்ட பகுதியான 70 சதவீத கால்வாய் பகுதியில் எந்த அளவு எடை கொண்ட கப்பலை ஓட்டிக் காட்ட இவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.
அப்படி அவர்கள் தயார் என்றால் அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேற்படி கப்பல் பயணத்திற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திட்டத்தை மத்திய அரசே, கையை சுட்டுக் கொண்டது போதும்; இனி கடலில் கரைப்பதற்கு பெருங்காயம் கைவசம் இல்லை என்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்தத் திட்டத்தை நாங்கள் ஒத்தி வைக்கிறோம் என்று வலிய முன் வந்து வாக்குறுதி தந்து கரியை பூசிய பிறகும், மத்திய அரசை எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்லத் தயாராக இல்லாத கருணாநிதி, இது அற்புதத் திட்டம் என்பது போல எழுதியும், பேசியும் வருகிறார்.
என்றைக்கு ராமரைப் பற்றி இழிவாகப் பேசினாரோ, அன்றில் இருந்து வட மாநிலங்களில் வாழும் தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லக் கூடிய தமிழர்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்பது கருணாநிதிக்கு நன்கு தெரியும்.
கருணாநிதிக்கு, டெல்லிக்குச் சென்று ஒரு பொதுக் கூட்டத்தில் ராமரைப் பற்றி இங்கு சொன்ன கருத்தை அங்கும் சொல்லக் கூடிய தைரியம் இருக்கிறதா என்று அங்குள்ளவர்கள் கேட்கிறார்கள். இதற்கு அவர் தயார் என்றால், அவரது பயணச் செலவை அதிமுக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications