காங்.கும் வேணாம்..பாஜகவும் வேணாம்-குமாரசாமி
பெங்களூர்:
காங்கிரசுடனோ அல்லது பாஜகவுடனோ மீண்டும் கூட்டணி அமைத்து கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைக்கும் திட்டம் ஏதும் தனக்கு இல்லை என முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
பாஜக-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் சார்பில் முதல்வராக இருந்துவிட்டு ஆட்சியை பாஜகவிடம் தர மறுத்த குமாரசாமிக்கு அவரது கட்சியில் உள்ள முற்பட்ட சமூக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இப்போது சட்டசபை முடக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில், இந்த எதிர்ப்பு எம்எல்ஏக்களை வளைக்க பாஜக முயன்று வருகிறது. அதே போல காங்கிரசும் ஜனதா தளத்தின் ஆதரவைப் பெற்று கூட்டணி அரசு அமைக்க முயன்று வருகிறது. குமாரசாமியின் தம்பி ரேவண்ணாவுக்கு துணை முதல்வர் பொறுப்பு தரத் தயார் என்று மறைமுகமாகக் கூறி வருகிறது.
ஒரு கட்டத்தில் மீண்டும் பாஜகவுக்கே ஆதரவு தர குமாரசாமி தயார் என்றும் செய்திகளும் பரவின.
இந் நிலையில் சட்டசபையைக் கலைத்துவிடுமாறு, எந்தக் கூட்டணிக்கு தான் தயாரில்லை என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், காங்கிரஸ், பாஜக ஆகிய இருவருடனும் கூட்டணி அமைத்து வேதனை தான் மிஞ்சியது. இந்த இருவருமே எங்களை ஏமாற்றிவிட்டனர். இனி மக்களிடம் செல்வது தான் சரி.
எதியூரப்பா முதல்வராகக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ள சில முக்கிய பாஜகவில் தலைவர்கள் தான் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போகக் காரணம். ஆட்சி மாற்றம் குறித்து என்னுடன் எதியூரப்பா எப்போதாவது நேரில் வந்து பேசினாரா.
ஆட்சியை ஏன் பாஜகவிடம் தரவில்லை என்பது குறித்து மேடையில் அவர்களுடன் விவாதம் நடத்தக் கூட நான் தயார். ஆட்சியைத் தர மாட்டோம் என்று ஒரு முறை கூட நான் இதுவரை சொல்லவில்லை என்றார் குமாரசாமி.