'குப்பை' இ-மெயில் வந்தால் கேஸ் போடலாம்!
டெல்லி:
தேவையில்லாமல் 'ஜங்க் இ-மெயில்'களை அனுப்புவோர் மீது வழக்கு தொடரும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது செல்போன்களில் தேவையில்லாமல் வரும் அழைப்புகளைத் தடுக்க அரசு வசதி செய்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்டர்நெட்டைப் பயன்படுத்துவோருக்கு அனுப்பப்படும் தேவையில்லாத ஜங்க் இ மெயில்களைத் தடுக்கவும் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி ஜங்க் இ மெயில்களை அனுப்புவோர் மீது நெட் பயன்பாட்டாளர்கள் வழக்கு தொடர வகை செய்யும் விதத்தில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.
இதற்காக 2006ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 40வது பிரிவில் புதிய விதிமுறையை இணைக்க மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக இணைக்கப்பட வேண்டிய வாசகங்கள் குறித்து தற்போது அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
இதுதவிர எனக்கு மெயில் செய்யாதீர்கள் என்ற புதிய (செல்போன்களில் என்னை அழைக்காதீர்கள் என்று தற்போது கொண்டு வரப்பட்டுள்ள விதிமுறையைப் போல) பதிவு முறையை அமல்படுத்துவது குறித்தும் அரசு ஆய்வு செய்து கொண்டிருக்கிறது.
தவறான, அவதூறான மெயில்களை அனுப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை, அல்லது பாதிப்புக்கேற்ற நஷ்ட ஈட்டைக் கோர முடியும். மேலும் குற்றம் மோசடிப் பிரிவின் (பிரிவு 420) கீழ் வந்தால் தண்டனைக் காலம் 7 ஆண்டுகள் வரை இருக்கும்.
இ மெயில் மூலம் தவறான வாக்குறுதி அளிப்போர், பணம் தருவதாக உறுதியளித்து ஏமாற்றுவோர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications