நெல்லையில் கோஷ்டி மோதல் - 5 பேர் கைது
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் கருவந்தா என்ற இடத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 7 பேர் வெட்டப்பட்டனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊத்துமலை அருகே உள்ளது கருவந்தா ஊராட்சி. இங்கு பொது நல்லியில் தண்ணீர் பிடிப்பதில் நேற்று மாலை இரு பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டு மோதிக் கொண்டனர்.
ஒரு பிரிவினர் வசிக்கும் தெருவுக்குச் செல்லும் குடிநீர் குழாயை மற்றொரு கோஷ்டியினர் அடைத்து வைத்து விட்டனர். இது குறித்து அவர்கள் ஊராட்சி தலைவி ஜெயா அன்பு ரூபியிடம் முறையிட்டனர்.
இதையடுத்து ஊராட்சி தலைவியின் கணவர் செல்வம் இரு தரப்பினரையும் அழைத்து பேசினார். அப்போது ஊராட்சி ஊழியரான சுப்பன் மகன் மாடசாமி என்பவர் குழாய் அடைப்பை நீக்காவிட்டால் நாளை மொத்தமாக அனைத்து குழாய்களையும் அடைத்து விடுவோம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு கோஷ்டியினர் மாடசாமியை அடித்து உதைத்தனர்.
இதை தடுக்க முயன்ற அவரது உறவினர்களை அரிவாளால் வெட்டினர். இதில் பாலகிருஷ்ணன், கருப்பசாமி, பெருமாள், சேர்வராயன், செல்லத்துரை மனைவி இசக்கியம்மாள், சுப்பன், மாடசாமி மனைவி சரோஜா ஆகிய 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த அனைவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் எஸ்.பி ஸ்ரீதர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி பாலுசாமி, அழகு, பெரியகண்ணன், செல்லக்காளை, முருகன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். கோஷ்டி மோதலை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.