ஆம்பூர்-நின்ற லாரி மீது பேருந்து மோதி 3 பேர் பலி
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து, நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் படுகாயமடைந்தனர்.
தர்மபுரி அருகேயுள்ள சோழியநல்லூரைச் சேர்ந்தவர்கள் திருப்பதிக்கு சென்றனர். இவர்கள் சென்ற பேருந்து ஆம்பூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்தின் இடதுபுறத்தில் அமர்ந்திருந்த பயணிகள் படுகாயமடைந்தனர். இதில் கந்தன்(70) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பேருந்து விபத்தில் சிக்கியதை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஒரு டாக்டர் மட்டும் இருந்துள்ளார். இதனால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வேன்கள் 3 இருந்தாலும் டிரைவர்கள் இல்லாததால் காயமடைந்தவர்களை வேறு மருத்தவமனைகளுக்கும் உடனடியாக கொண்டு போக முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 3 ஆம்புலன்ஸ் வேன்களையும், மருத்துவமனை ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், இந்த இழுத்தடிப்பாலும் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாலும் சித்ரா (40), அஜித்குமார்(8) ஆகியோர் பலியாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications