நெல்லை 'ஐடி பார்க்'-ஜனவரியில் பணிகள் தொடக்கம்
திருநெல்வேலி:
நெல்லை கங்கைகொண்டானில் அமையவுள்ள தொழில்நுட்பப் பூங்காவுக்கான பணிகள் ஜனவரி மாதத்தில் தொடங்கவுள்ளது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் தகவல் தொழில் நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் எல்காட் நிர்வாக இயக்குனர் உமா சங்கர் கலந்து கொண்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஓசூர், நெல்லை உள்பட 9 இடங்களில் தொழில் நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படுகிறது.
நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் 5 ஆயிரம் ஏக்கரில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு பூர்வாங்க பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
இங்கு குடியிருப்புகள், ஐந்து நட்சத்திர ஹோட்டல், பள்ளி, மருத்துவமனை உள்ளிட்டவை சர்வதேச தரத்தில் அமைக்கப்படுகிறது. மேலும் பொழுதுபோக்கு வசதிக்காக ஏரியுடன் கூடிய பூங்காவும் அமைக்கப்படுகிறது.
இதற்குரிய வரைபடமும் உருவாக்கப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர ஹெலிபேட் ஒன்றும் அமைக்கப்படுகிறது.
முதல் கட்டமாக பெரிய நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்காவை சேர்ந்த சுதர்லேன்ட் குளோபல் சர்வீஸ் நிறுவனத்திற்கு 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் நாட்டு ஹெக்ஸ் ஓவர் என்ற சாப்ட்வேர் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சுதர்லேண்ட் நிறுவனம் வரும் ஜூலையில் ரூ.200 கோடியில் பணிகளை துவக்குகிறது.
தொழில்நுட்பப் பூங்காக்களில் அரசு சார்பில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். இதற்காக அரசு ரூ.100 கோடி ஒதுக்கி உள்ளது.
இதில் ரூ.45 கோடியில் 9 தொழில்நுட்ப பூங்காக்களுக்கு தேவையான குடி நீர் வசதிகள் செய்யப்படுகிறது. இப்பணிகளுக்கு டெண்டர் விரைவில் விடப்படும். இது தவிர அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து உள்கட்டமைப்பு வசதிக்கான பணிகளை மேற்கொள்ளும்.
கங்கைகொண்டான் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்கான பணிகள் ஜனவரி மாதம் துவக்கப்படும்.
இதன் மூலம் 1 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 15 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இங்கு பொறியியல் பட்டதாரிகள் மட்டும் இல்லாமல் கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது என்றார் அவர்.