மழை வேண்டி மக்கள் பிச்சை எடுத்த அவலம்!
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மழை வேண்டி மக்கள் பிச்சை எடுத்த அவலம் நடைபெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மடத்துப்பாளையம் என்ற கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
பருவமழை பெய்யும் இந்த நேரத்தில் இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே மழை பெய்யாததால் அப்பகுதி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால் இந்த பகுதி மக்கள் அனைவரும் தங்கள் ஊரில் உள்ள விநாயகர் கோவில் முன்பு நேற்று திரண்டனர். பருவ மழை இல்லாததால் மழை பெய்ய வேண்டி பிச்சை எடுக்கும் வினோத நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி பெண்கள் வீடுவீடாக சென்று பிச்சை எடுத்தனர். பெண்களுடன் சிறு குழந்தைகளும் ஆர்வத்துடன் சென்று பிச்சை எடுத்தனர்.
பிச்சை எடுத்த உணவுப் பொருட்களை விநாயகர் கோவில் முன்பு வைத்து வணங்கினர். பின்பு ஊருக்கு வெளியே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கொண்டு காட்டிற்குள் கொண்டு சென்றனர்.
அப்போது அவர்களை பின் தொடர்ந்த ஆண்கள், மழை வரும் கண்ணே மயங்காதே என கிராமியம் மனம் கமழும் பாட்டு பாடினர்.
தங்கள் ஊரில் மழை பெய்யாவிட்டால், இப்படி செய்வது தான் இவர்களுடைய வழக்கமாம். இந்த வழிபாட்டை அந்த கிராமத்து மக்கள் தொன்று தொட்டு செய்து வருகிறார்களாம். பிச்சையெடுத்து வழிபட்டால் இன்னும் ஓரிரு நாளில் மழை பெய்யும் என்பது அவர்களின் நம்பிக்கையாம்.












Click it and Unblock the Notifications