50 ரூபாய் பாக்கி வைத்தவருக்கு அரை மொட்டை!
புளியங்குடி:
நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே கோவில் விழாவுக்கு 50 ரூபாய் வரி பாக்கி வைத்ததற்காக வாலிபருக்கு அரை மொட்டை போட்ட அநியாயம் நடந்துள்ளது.
புளியங்குடி சிந்தாமணியில் நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் கொடை விழா நடக்கும். இந்தாண்டு கொடை விழா துவங்கியது.
அதேபகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி நாடார் மகன் சண்முகையா கோவிலுக்கு மொட்டை போடுவதாக நேர்த்தி கடன் செய்திருந்தார். அதன்படி காலை கோவிலுக்கு மொட்டை போட வந்தார். சவர தொழிலாளி அவருக்கு மொட்டையடித்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஊர் நாட்டாமை ஆறுமுகம், கோவில் நிர்வாக செயலாளர் செல்வம், பொருளாளர் மாரியப்பன் உள்ளிட்டோர் சண்முகைய்யாவை மொட்டை போட விடாமல் தடுத்துள்ளனர்.
கோவிலுக்கு வரி பாக்கி உள்ளது. கடந்த வருடமே நீ வரி கொடுக்கவில்லை என்று தகராறு செய்தனர். இதையடுத்து சண்முகையா ரூ.500 கொடுத்தார். ஆனால் ரூ.550 தந்தால் தான் மொட்டை போட விடுவோம் என்று கறாராக கூறினர். ஆனால் சண்முகையா ரூ.550 கொடுக்க மறுத்தார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ரூ.50 தகராறில் அவரை மொட்டை போட விடாமல் பாதியிலேயே திருப்பி அனுப்பினர் கோவில் நிர்வாகிகள்.
அரைகுறை மெட்டையுடன் கோவிலை விட்டு வெளியே வந்த சண்முகையா அவமானம் தங்காமல் புளியங்குடி டி.எஸ்.பியிடம் புகார் செய்தார். புளியங்குடி போலீசார் நாட்டாண்மை ஆறுமுகம் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications