ஆர்.ஐயை அடித்த வி.ஏ.ஓ
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளரை திமுக பஞ்சாயத்துத் தலைவரும், கிராம நிர்வாக அலுவலரும் தாக்கியதால் ஆத்திரமடைந்த அரசு ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் குதித்து, இருவரையும் அறையில் பூட்டி வைத்து தர்ணாவில் குதித்ததால் ஆட்சித் தலைவர் அலுவலகம் ஸ்தம்பித்தது.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சித் தலைவராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த செல்வராஜ். இவரும், கிராம நிர்வாக அலுவலர் அர்ஜூனன் என்பவரும் பட்டா தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு வருவாய் ஆய்வாளர் குமரேசனை சந்தித்தனர். அப்போது அவர்கள் சில விவரங்களைக் கேட்டுள்ளனர். அதற்கு வருவாய் ஆய்வாளரின் உதவியாளர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆவேசத்துடன் எழுந்த செல்வராஜும், அர்ஜூனனும், வருவாய் ஆய்வாளரையும், அவருடைய உதவியாளரையும் சட்டையைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை ஊழியர்கள் அங்கு திரண்டனர். அர்ஜூனனையும், செல்வராஜையும் அறைக்குள் வைத்துப் பூட்டினர். பின்னர் அறைக்கு வெளியே அனைவரும் அமர்ந்து தர்ணாவில் குதித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தத் தகவல் அறிந்ததும் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள பிற ஊழியர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் ஆட்சித் தலைவர் அலுவலகமே ஸ்தம்பித்தது.
இதையடுத்து வருவாய் ஆய்வாளைரயும், உதவியாளரையும் தாக்கிய கிராம நிர்வாக அலுவலர் அர்ஜூனன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இருப்பினும் பேரூராட்சித் தலைவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications