மலையில் நிலச்சரிவு-ஆற்றில் பஸ் கவிழ்ந்து 41 பேர்
டேராடூன்:
ரிஷிகேசுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்கள் சென்ற பேருந்து டேராடூன் அருகே நிலச்சரிவால் மலைப்பாதையில் உருண்டு நதியில் மூழ்கியதில் 41 பயணிகள் உயிரிழந்தனர்.
ஒரிஸ்ஸா மாநிலத்தை சேர்ந்த 45 பேர் பேருந்தில் புனித பயணம் மேற்கொண்டனர். பத்ரிநாத் கோவிலில் வழிபாட்டை முடித்துக் கொண்டு நேற்று மாலை ரிஷிகேஷ் சென்று கொண்டிருந்தனர்.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள விஷ்ணு பிரயாக் என்ற இடத்தில் உயரமான மலைப் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது மலைப் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து மிகப் பெரிய பாறை உருண்டு வந்து பேருந்தின் மீது மோதியது.
இதையடுத்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மலையில் உருண்டு அலக்நந்தா ஆற்றுக்குள் மூழ்கிவிட்டது.
இதில் பேருந்துக்குள் இருந்த பெரும்பாலானோர் உயிரிழந்துவிட்டனர். தீயணைப்புப்படை மற்றும் போலீசார் விரைந்து வந்து கயிறு மூலம் பேருந்தை கரைக்கு கொண்டு வந்தனர்.
அதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். பேருந்துக்குள் இருந்து 41 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காணாமல் போனவ 2 பேரின் உடல்களை தேடி வருகிறார்கள்.