அவதூறாக பேசிய அதிமுக கவுன்சிலர் கைது
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகராட்சித் தலைவியை அவதூறாகப் பேசியது தொடர்பாக அதிமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி நகராட்சி தலைவியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மல்லிகா உள்ளார். தங்களது வார்டுகளுக்கு பணிகள் எதுவும் நடக்கவில்லை என்றும், நகராட்சித் தலைவி மீது ஊழல் புகார் கூறியும் பெரும்பாலான கவுன்சிலர்கள் நெல்லை நகராட்சி மண்டல இயக்குனரிடம் மனு அளித்தனர்.
இதன் அடிப்படையில் கடந்த மாதம் 20ம் தேதி கவுன்சிலர்கள் அளித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பரிசீலனை செய்வதற்கான நகராட்சி சிறப்பு கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அன்றைய தினம் நகராட்சி மண்டல இயக்குனர் விடுப்பில் சென்றதால் தேதி குறிப்பிடப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனை கண்டித்து பெரும்பாலான கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது கோவில்பட்டி உசேன் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகனும், 16வது வார்டு அதிமுக கவுன்சிலருமான ராமர் என்பவர் நகராட்சித் தலைவி மல்லிகாவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமர் மீது பொய் வழக்கு போட்டதாகக் கூறி நகராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். கடந்த 10ம் தேதி கவுன்சிலர் ராமரை உடனடியாக கைது செய்யகோரி அனைந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.
அதேசமயம், கவுன்சிலர் ராமர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற கோரி நகர அதிமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்நிலையில் கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அதிமுக கவுன்சிலர் ராமரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications