விரைவில் புல்லட் ரயில்: வேலு
சென்னை:
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் தீவிர ஆர்வம் காட்டி வருவதால் இந்தியாவில் விரைவில் புல்லட் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு கூறியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் இந்தியன் வங்கி இணைந்து நடத்திய கருத்தரங்கில் வேலு கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியாணா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள், தங்களது மாநிலங்களில் புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. புல்லட் ரயில்களால் பயண நேரம் வெகுவாக குறையும்.
பல்வேறு மாநிலங்களும் புல்லட் ரயில் திட்டம் குறித்து ஆர்வமாக இருப்பதால் விரைவில் இந்தத் திட்டத்தை மத்திய ரயில்வே அமைச்சகம் நடைமுறைப்படுத்தும்.
டெல்லி முதல் மும்பை வரையிலும் மற்றும் லூதியானா முதல் கொல்கத்தா வரையிலுமான 3000 கிலோமீட்டர் தொலைவுக்கு சரக்கு ரயில்களுக்கான தனி ரயில் பாதை அமைக்கும் திட்டம் ரூ. 30,000 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.
2வது கட்டமாக சென்னை முதல் கோவா வரையிலும், டெல்லி முதல் கொல்கத்தா வரையிலும் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றார் வேலு.












Click it and Unblock the Notifications