அடித்துக் கொண்ட அதிமுகவினர்
லால்குடி:
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அதிமுகவினருக்கிடையே கோஷ்டி மோதல் மூண்டது. இதைத் தடுக்கப் போன போலீஸார் மீது அதிமுகவினர் கல் வீசித் தாக்கினர். இதுதொடர்பாக 47 பேரை போலீசார் கைது செய்தனர்.
லால்குடி ஊராட்சி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளராக இருப்பவர் விஜயமூர்த்தி. இதேப் பகுதியைச் சேர்ந்த தர்மதுரை என்பவர் ஜெயலலிதா பேரவையின் இணைச் செயலாளராக இருக்கிறார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாம். இதனால் இருவருக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒத்துப் போகவில்லை.
சமீபத்தில் விஜயமூர்த்திக்கு ஜெயலலிதா பேரவையின் ஒன்றிய செயலாளர் பொறுப்பு கிடைத்தது. இதனால் ஆத்திரமடைந்த தர்மதுரை, விஜயமூர்த்தியின் மகனைத் திட்டியுள்ளார். விஜயமூர்த்தியிடம் இதை கூறினார் அவரது மகன் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த விஜயமூர்த்தி, தர்மதுரையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு 8-30 மணியளவில் விஜயமூர்த்தியின் வீட்டுக்கு உருட்டுக் கட்டை மற்றும் ஆயுதங்களுடன் வேனில் வந்த தர்மதுரையின் ஆதரவாளர்கள் வீட்டை சூறையாடினர்.
வீட்டிலிருந்த விஜயமூர்த்தியின் மகனை அடித்து உதைத்தனர் ஆத்திரமடைந்த விஜயமூர்த்தி தரப்பினர் தர்மதுரையின் வீட்டின்மீது தாக்குதல் நடத்த கும்பலாக சென்றனர். ஆனால் இவர்கள் தாக்க வருவார்கள் என்று தெரிந்து அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.
இதனால் வந்தவர்கள், தர்மதுரையின் வீட்டை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். தாக்குதல் சம்பவம் அறிந்து போலீசார் குவிந்தனர். இதையடுத்து விஜயமூர்த்தி தரப்பினர், காவல்துறையினர் மீது சரமாரியாக கல்வீச்சு நடத்தினர்.
இதில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. நிலைமை மோசமாவதைக் கண்ட போலீசார் அதிமுகவினரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ராமதுரை தரப்பினர் 16 பேர் உட்பட மொத்தம் 47 பேரை போலீசார் கைது செய்தனர். சண்டைக்குக் காரணமான விஜயமூர்த்தியும், ராமதுரையும் தலைமறைவாகி விட்டனர்.
அதிமுகவினர் கோஷ்டி மோதலால் லால்குடியில், பதட்டம் நிலவுகிறது. அங்கு போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலுக்கு ஊர் மக்கள் வேறு காரணத்தைக் கூறுகிறார்கள். விஜயமூர்த்தியின் மகன், ராமதுரையின் மகளை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் சண்டை மூண்டுள்ளது. ஆனால் காதல் விவகாரத்தை மறைத்து விட்டு வெறும் கோஷ்டி மோதலாக இதை இரு தரப்பும் காட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.